செய்திகள்
மரணம்

இரட்டை குழந்தை பிறந்த நிலையில் கிராம நிர்வாக அதிகாரி மர்மமரணம்

Published On 2020-10-13 07:15 GMT   |   Update On 2020-10-13 07:15 GMT
இரட்டை குழந்தை பிறந்த நிலையில், பூட்டிய வீட்டிற்குள் கிராம நிர்வாக அதிகாரி மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
கோவை:

கோவை க.க.சாவடி அருகே உள்ள புங்கேகவுண்டன்புதூரை சேர்ந்தவர் குருசாமி (வயது 41). இவர் வெள்ளலூர் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வந்தார். இவர், ஒத்தக்கால் மண்டபத்தில் பணியாற்றியபோது அங்கு பணியாற்றிய உதவியாளர் தீபா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த தீபா, பிரசவத்திற்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இதனால் குருசாமி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இந்த நிலையில் தீபாவுக்கு பிரசவம் ஆனது. அதில் அவருக்கு இரட்டை பெண் குழந்தை பிறந்தது. இதற்கிடையே, குழந்தைகளை பார்க்க கணவர் குருசாமி ஆஸ்பத்திரிக்கு செல்லவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி பச்சிளம் குழந்தைகளுடன் தீபா வீடு திரும்பினார். அப்போது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இதனால் தீபா ஜன்னல் வழியாக உள்ளே பார்த்தபோது பூட்டிய அறைக்குள் குருசாமி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதனைகண்டு அதிர்ச்சி அடைந்த தீபா, இது குறித்து க.க.சாவடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து அறை கதவை உடைத்து உள்ளே சென்றனர். பின்னர் அவர்கள் குருசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக் காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கிராம நிர்வாக அதிகாரி குருசாமி இறந்து 2 நாட்கள் ஆனதால் அவரது உடல் அழுகிய நிலையில் கிடந்தது. மேலும் அறை முழுவதும் ஏராளமான மதுபாட்டில்கள் கிடந்தன. எனவே அளவுக்கு அதிகமான மது குடித்ததால் அவர் இறந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். மேலும் அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து தெரியவில்லை. அவருடைய மர்ம சாவு குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News