செய்திகள்
மாதேஷ்

மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை பலாத்காரம் செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை

Published On 2020-10-10 07:42 GMT   |   Update On 2020-10-10 07:42 GMT
மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து கிருஷ்ணகிரி கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் 20 வயது இளம்பெண். வாய் பேச இயலாத மனநலம் பாதிக்கப்பட்டவர். இவரது தந்தை விவசாயி ஆவார். கடந்த 25.8.2015 அன்று விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த தனது தந்தைக்கு இளம்பெண் உணவு எடுத்து சென்று கொண்டிருந்தார்.

அவர் கிருஷ்ணாபுரம்-நொகனூர் சாலையில் சென்ற போது, அதே ஊரைச் சேர்ந்த மாதேஷ் (24) என்ற வாலிபர் அங்கு வந்தார். அவர் அந்த இளம்பெண்ணை மிரட்டி, பாலியல் பலாத்காரம் செய்தார். இதுகுறித்து இளம்பெண்ணின் தந்தை தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன் பேரில் அப்போதைய இன்ஸ்பெக்டர் ஜெயந்தி, வாலிபர் மாதேசை கைது செய்தார். அவர் மீது பாலியல் பலாத்காரம் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி நேற்று தீர்ப்பு வழங்கினார். அதில் குற்றம் சாட்டப்பட்ட மாதேசிற்கு ஆயுள் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் கலையரசி ஆஜர் ஆகி வாதாடினார்.
Tags:    

Similar News