செய்திகள்
கைது

கார் ஓட்டி பழக சென்ற இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை- பயிற்சியாளர் கைது

Published On 2020-10-02 18:44 IST   |   Update On 2020-10-02 18:44:00 IST
ஊட்டியில் கார் ஓட்டி பழக சென்ற இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பயிற்சியாளர் கைது செய்யப்பட்டார்.
ஊட்டி:

ஊட்டியில் கார் ஓட்டி பழக சென்ற இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பயிற்சியாளர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்களை இயக்க கற்று கொடுக்கும் தனியார் ஓட்டுனர் பயிற்சி பள்ளிகள் உள்ளன. இங்கு நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் ஓட்டுனர் பயிற்சி பெற்று, சம்பந்தப்பட்ட பள்ளிகள் மூலம் ஓட்டுனர் உரிமத்துக்கு விண்ணப்பித்து, அதனை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் 21-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை ஊட்டியில் உள்ள ஒரு தனியார் ஓட்டுனர் பயிற்சி பள்ளியில் இளம்பெண் ஒருவர் கார் ஓட்டும் பயிற்சி பெற்றார். அவருக்கு, ஓட்டுனர் பயிற்சியாளரான அருண் என்பவர் கார் ஓட்ட கற்றுக்கொடுத்தார்.

இதற்கிடையில் சம்பவத்தன்று லவ்டேல் பகுதியில் கார் ஓட்ட கற்று கொடுத்து கொண்டு இருந்தபோது, அந்த இளம்பெண்ணுக்கு அருண் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த இளம்பெண் நேற்று முன்தினம் ஊட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் ஓட்டுனர் பயிற்சியின்போது இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அருண் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை ஊட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News