செய்திகள்
ராஜசேகர்

கார் மெக்கானிக் கொலை வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

Published On 2020-10-01 14:19 GMT   |   Update On 2020-10-01 14:19 GMT
கார் மெக்கானிக் கொலை வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து கடலூர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
கடலூர்:

கடலூர் வன்னியர்பாளையம் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 55). கார் மெக்கானிக். இவர் திருப்பாதிரிப்புலியூர் எஸ்.என்.சாவடி அய்யனார்கோவில் அருகில் மெக்கானிக் கடை வைத்திருந்தார். கடந்த 14.1.2017 அன்று பொங்கல் பண்டிகையை கொண்டாடி விட்டு அங்கேயே இரவு படுத்து தூங்கினார்.

அப்போது அங்கு வந்த எஸ்.என்.சாவடி பஞ்சாட்சரம் மகன் தொழிலாளியான ராஜசேகர் (40) என்பவர் தூங்கிக்கொண்டிருந்த முருகனை எழுப்பி, அவரிடம் ஏன், என்னுடைய வீட்டு முன்பு அடிக்கடி நிற்கிறாய் என்று கேட்டு தகராறு செய்தார். இதில் அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ராஜசேகர் அருகில் கிடந்த அரிவாளை எடுத்து முருகனை சரமாரியாக வெட்டிக்கொலை செய்தார். முன்னதாக ராஜசேகருக்கு ஆதரவாக அதே பகுதியை சேர்ந்த ராமலிங்கம் (50) என்பவரும் சேர்ந்து முருகனை தாக்கினார்.

இது பற்றி கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜசேகர், ராமலிங்கம் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு கடலூர் முதலாவது கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில், நேற்று நீதிபதி செந்தில்குமார் தீர்ப்பு வழங்கினார்.

அதில், இவ்வழக்கில் ராஜசேகர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.3 ஆயிரத்து 500 அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும் இவ்வழக்கில் முருகனை தாக்கிய ராமலிங்கத்திற்கு 2 மாதம் சிறை தண்டனையும், ரூ.500 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் பாஸ்கர் ஆஜராகி வாதாடினார்.
Tags:    

Similar News