செய்திகள்
கொரோனா பரிசோதனை முகாமை முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆய்வு

கொரோனா பரிசோதனை தொடர்பாக நாராயணசாமி ஆய்வு

Published On 2020-09-09 11:41 IST   |   Update On 2020-09-09 11:41:00 IST
கொரோனா பரிசோதனைகள் தொடர்பாக முதல்-அமைச்சர் நாராயணசாமி நேரில் ஆய்வு நடத்தினார்.
புதுச்சேரி:

புதுவையில் கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பினை தொடர்ந்து கூடுதல் பரிசோதனைகளை செய்ய மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து அனைத்து தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும், கோரிமேட்டில் உள்ள கொசு தடுப்பு மற்றும் ஆய்வு மையத்திலும் கொரோனா பரிசோதனை ஆய்வகங்களில் சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

கோரிமேட்டில் உள்ள கொசு தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவன அலுவலகத்தில் நாள்தோறும் 1000 பரிசோதனைகளை மேற்கொள்ள வாய்ப்புகள் உள்ளது. இந்த நிலையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோர் அங்கு நேற்று நேரில் சென்று ஆய்வு நடத்தினார்கள்.

மேலும் அவர்கள் முதலியார்பேட்டையில் கொரோனா பரிசோதனை மாதிரிகள் சேகரிக்கப்பட்ட இடத்துக்கும் சென்று ஆய்வில் ஈடுபட்டனர். சாரம் துணை சுகாதார நிலையத்தில் ஆய்வு நடத்திய அவர்கள் அங்குள்ள மருத்துவர்களிடம் தேவையான மருந்து, மாத்திரைகள் போதிய அளவில் கையிருப்பில் உள்ளதா? என்பது குறித்தும் கேட்டறிந்தனர்.

இதற்கிடையே தலைமை செயலகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து வளர்ச்சி மற்றும் நிவாரண மறுவாழ்வு ஆணையரான அன்பரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் சுகாதாரத்துறை செயலாளரும் கலெக்டருமான அருண், இயக்குனர் மோகன்குமார், துணை இயக்குனர் ரகுநாதன் மற்றும் கோவிட் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ரமேஷ் உள்பட சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் அதற்காக எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மத்தியக்குழு அளித்துள்ள பரிந்துரைகள் அவற்றை செயல்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

Similar News