செய்திகள்
புதுச்சேரிக்குள் தமிழக பேருந்துகளுக்கு அனுமதி இல்லை
தமிழக அரசு பேருந்துகள் புதுச்சேரி எல்லைக்குள் அனுமதிக்கப்படாததால் பயணிகள் அவதி அடைந்தனர்.
புதுச்சேரி மாநிலத்தில் உள்ளூர் பேருந்துகளை இயக்க அரசு அறிவித்து இருந்தாலும் 4 மாதத்திற்கான சாலை வரியை அரசு ரத்து செய்தால் பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவித்து தனியார் பேருந்து உரிமையாளர்கள் பேருந்துகளை இயக்காமல் உள்ளனர்.
இந்நிலையில் இன்று முதல் தமிழகத்தில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல பேருந்துகளுக்கு அனுமதிக்கப்பட்டுருந்த நிலையில் திருவண்ணாமலை மற்றும் சென்னையில் இருந்து வந்த தமிழக அரசு பேருந்துகள் புதுச்சேரி எல்லையான கோரிமேடு பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளன.
பயணிகள் எல்லையில் இருந்து புதுச்சேரிக்குள் நடந்து சென்று உள்ளூர் பேருந்தில் பயணிக்கின்றனர். புதுச்சேரி அரசு பேருந்துகள், தனியார் பேருந்துகள் எதுவும் தமிழகப் பகுதிகளுக்குள் இயக்க அனுமதி வழங்கவில்லை. எனவே இருமாநில அரசுகள் பயணிகள் நலனை கருத்தில் கொண்டு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.