செய்திகள்
கதிர்காமம் அரசு மருத்துவமனையில் கூடுதல் பணியாளர்களை நியமிக்க நாராயணசாமி உத்தரவு
கதிர்காமம் அரசு மருத்துவமனையில் கூடுதல் பணியாளர்களை நியமிக்க முதல்-அமைச்சர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரி:
புதுவை கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவமனை கொரோனா சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அங்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என புகார் எழுந்தது.
இதுகுறித்து சட்டமன்ற வளாகத்தில் உள்ள கமிட்டி அறையில் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று காலை ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், செயலாளரும், மாவட்ட கலெக்டருமான அருண், இயக்குனர் மோகன்குமார், இந்திய மருத்துவமுறை துறை இயக்குனர் ஸ்ரீராமுலு, கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இயக்குனர் மாணிக்க தீபன் மற்றும் டாக்டர் ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கழிவறைகளை சுத்தம் செய்ய போதிய பணியாளர்கள் இல்லாதது குறித்து தெரிவிக்கப்பட்டது. அந்த பணிகளுக்காக கூடுதல் பணியாளர்களை உடனடியாக நியமிக்க முதல் அமைச்சர் நாராயணசாமி உத்தரவிட்டார்.