செய்திகள்
மரணம்

வேலூரில் தீக்குளித்த மாணவி சிகிச்சை பலனின்றி பலி

Published On 2020-06-17 07:12 IST   |   Update On 2020-06-17 07:12:00 IST
வேலூர் பாகாயம் அருகே குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டியதால் தீக்குளித்த மாணவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
வேலூர்:

வேலூர் பாகாயம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 15 வயது மாணவி, இந்த ஆண்டு 10-ம் வகுப்பு படித்து முடித்திருந்தார். மாணவி வீட்டில் மேற்கூரை இல்லாத கழிப்பறையில் குளிக்கும் வீடியோவை அதே பகுதியை சேர்ந்த கணபதி என்கிற தாமஸ் (வயது 19), 17 வயது சிறுவன் ஆகியோர் வீடியோ எடுத்துள்ளனர். பின்னர் அவர்கள் 2 பேர் மற்றும் பென்னாத்தூரை சேர்ந்த பூனை கண்ணன் என்கிற ஆகாஷ் (22) ஆகியோர் அந்த வீடியோவை வைத்து மிரட்டி உள்ளனர். அதனால் மனவேதனை அடைந்த மாணவி கடந்த 14-ந் தேதி உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். இதைக்கண்ட உறவினர்கள் அவரை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 90 சதவீத தீக்காயம் அடைந்த மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இதுகுறித்து பாகாயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபா, போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து 3 பேரையும் கைது செய்தார். 17 வயது சிறுவன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். மற்ற 2 பேரும் குடியாத்தம் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று இரவு 11 மணியளவில் மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதைத்தொடர்ந்து இந்த வழக்கை கொலை வழக்காக போலீசார் மாற்றி உள்ளனர்.

Similar News