செய்திகள்
முருகன்

வேலூர் ஜெயிலில் முருகன் 15-வது நாளாக உண்ணாவிரதம்

Published On 2020-06-16 09:00 IST   |   Update On 2020-06-16 09:00:00 IST
வேலூர் ஜெயிலில் முருகன் 15-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவர் யாருடனும் பேசாமல் தியான நிலையில் இருப்பதாகவும், அவரது உடல் எடை 3 கிலோ குறைந்து உள்ளதாகவும் ஜெயில் அதிகாரிகள் தெரிவித்தனர்
வேலூர் :

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன் வேலூர் ஆண்கள் ஜெயிலிலும், அவருடைய மனைவி நளினி பெண்கள் ஜெயிலில் தனி அறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக வேலூர் ஆண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் தங்களின் குடும்பத்தினர், உறவினர்களிடம் வீடியோ கால் மூலம் பேசி வருகிறார்கள். முருகன் தனது மனைவி மற்றும் உறவினர்களிடம் வாட்ஸ்-அப் வீடியோ கால் மூலம் பேச அனுமதிக்க சிறைத்துறை நிர்வாகத்துக்கு கோரிக்கை வைத்தார். ஆனால் அதற்கு சிறைத்துறை நிர்வாகம் அனுமதி அளிக்கவில்லை.

அதனால் மனவேதனை அடைந்த முருகன் ஜீவசமாதி அடைய வேண்டி கடந்த 1-ந் தேதி முதல் ஜெயிலில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். ஜெயில் அதிகாரிகள் உண்ணாவிரதத்தை கைவிடும்படி பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அவர் அதனை ஏற்காமல் தொடர்ந்து உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு முருகனின் உடல்நிலை சோர்வடைந்தது. அதைத்தொடர்ந்து அவருக்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டது. ஜெயில் டாக்டர்கள் தினமும் முருகனின் உடல்நிலையை கண்காணித்து வருகிறார்கள். நேற்று 15-வது நாளாக முருகன் உண்ணாவிரதத்தை தொடர்ந்தார்.

இதுகுறித்து ஜெயில் அதிகாரிகள் கூறுகையில், முருகன் கடந்த 1-ந் தேதி முதல் ஜெயிலில் வழங்கப்படும் உணவை ஏற்க மறுத்து வருகிறார். அவர் உண்ணாவிரதம் இருப்பது தொடர்பாக சிறைத்துறை நிர்வாகத்துக்கு எவ்வித மனுவும் அளிக்கவில்லை. உண்ணாவிரதத்தை கைவிடும்படி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் அவர் எதுவும் பேசவில்லை. முருகனின் உடல்நிலை சோர்வடையும்போது குளுக்கோஸ் ஏற்றப்பட்டு வருகிறது.

நேற்று முன்தினம் குளுக்கோஸ் ஏற்ற முயன்றபோது அதனை அவர் ஏற்க மறுத்துவிட்டார். முருகன் தனக்கு தேவையானவற்றை பேப்பரில் எழுதி காண்பிக்கிறார். பிறருடன் பேசுவதை தவிர்த்து விடுகிறார். ஜீவசமாதி அடைவதற்காக அவர் யாருடனும் பேசாமல் தியான நிலையில் உள்ளாரா? என்பது குறித்து தெரியவில்லை. தொடர் உண்ணாவிரதம் காரணமாக முருகனின் உடல் எடை சுமார் 3 கிலோ குறைந்துள்ளது என்று தெரிவித்தனர்.

Similar News