செய்திகள்
கொரோனா வைரஸ்

கடலூர் மாவட்டத்தில் கொரோனாவை தடுக்க கட்டுப்பாடு குழுக்கள்- அமைச்சர் பேச்சு

Published On 2020-05-22 15:48 IST   |   Update On 2020-05-22 15:48:00 IST
கடலூர் மாவட்டத்தில் நோய் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர மாவட்ட அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டு மாவட்டம், வட்டம், கிராமம் அளவில் அக்குழுக்கள் நோய் பரவாமல் திறம்பட செயல்பட்டு வருகிறது என்று அமைச்சர் எம்சி சம்பத் கூறியுள்ளார்.

கடலூர்:

கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. அமைச்சர் எம்.சி.சம்பத் தலைமை தாங்கினார்.

கொரோனா தடுப்பு பணி அலுவலர் சுப்பிரமணியன், கூடுதல் காவல்துறை இயக்குநர் வினித் வான்கடே, டி.ஐ.ஜி சந்தோஷ்குமார், கலெக்டர் அன்புச்செல்வன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் அமைச்சர் எம்.சி. சம்பத் பேசியதாவது:-

முதல்-அமைச்சர் உத்தரவுப்படி ஆணைக்கிணங்க 144 தடை உத்தரவு தொடங்கி நாட்கள் முதல் இன்று வரை அனைத்து அரசு பணியாளர்களும் தம் உயிரையும் துச்சமன நினைத்து பணியாற்றி வருகின்றனர்.

குறிப்பாக துப்புரவு பணிகள், கிருமி நாசினி தெளித்தல், உணவு வழங்குதல், கிருமி தொற்று கண்டறியப்பட்டு தடை செய்யப்பட்ட பகுதிகளில் அடிப்படை தேவைகளான காய்கறிகள், மளிகைப்பொருட்கள் சிறப்பாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மருத்துவதுறை ஊழியர்கள் 24 மணிநேரம் முழு அற்பணிப்போடு நோய் தொற்று கண்டறியப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து பரிபூரண குணமடையச் செய்து வீடுகளுக்கு அனுப்பி வைத்தும், சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு முழு வீச்சில் மருத்துவம் மற்றும் சத்தான சரிவிகித உணவு வழங்கப்பட்டு வருகிறது.

கடலூர் மாவட்டத்தில் நோய் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர மாவட்ட அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டு மாவட்டம், வட்டம், கிராமம் அளவில் அக்குழுக்கள் நோய் பரவாமல் திறம்பட செயல்பட்டு வருகிறது.

இனி வரும் நாட்களின் பொதுமக்கள் அனைவரும் சமூதாய இடைவெளியை கடைபிடிக்கவும், முக கவசம் அணிவது வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். தங்களையும், தங்களின் சுற்றுபுறங்களையும் தூய்மையாக வைக்கவும், தங்கள் வருங்கால சந்ததியினர் நலன் கருதி நோய் தொற்று பரவாமல் காக்க வேண்டும். பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு சிறப்பாக ஒத்துழைப்பு அளித்து வருவதற்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் பாண்டியன் எம்.எல்.ஏ, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகிருபாகரன், கூடுதல் கலெக்டர் ராஜகோபால் சுங்கரா, சப்-கலெக்டர்கள் விசுமகாஜன், பிரவின்குமார், கடலூர் ஆர்.டி.ஓ. ஜெகதீஸ்வரன், இணை இயக்குநர் (மருத்துவப்பணிகள்) டாக்டர் ரமேஷ்பாபு, துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) டாக்டர் கீதா, முன்னாள் நகர்மன்றத் தலைவர் குமரன், கடலூர் ஒன்றிய குழு தலைவர் தெய்வ பக்கிரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Similar News