செய்திகள்
மதுபானம்

தலைகீழாக மாறிய நிலைமை- டாஸ்மாக் மதுபானங்கள் புதுவைக்குள் நுழைந்தது

Published On 2020-05-08 14:46 IST   |   Update On 2020-05-08 14:46:00 IST
பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள் புதுவைக்கு வந்து மதுபானங்களை வாங்கி செல்வார்கள். தற்போது நிலைமை தலைகீழாக மாறி புதுவையை சேர்ந்தவர்கள் தமிழகத்திற்கு சென்று மதுபானங்களை பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி:

ஊரடங்கு உத்தரவில் மத்திய அரசு கடந்த 4-ந் தேதி தளர்வு அளித்தது.

இதனைத்தொடர்ந்து அனைத்து கடைகளையும் திறக்க புதுவை அரசு அனுமதிஅளித்தது. ஆனால், மதுபான கடைகளை திறக்க அரசு அனுமதி அளிக்கவில்லை.

ஆனால் டெல்லி, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மதுபான கடைகள் திறக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளை திறக்க அரசு அனுமதி அளித்தது.

சென்னை கோயம்பேடு சென்று வந்த காய்கறி வியாபாரிகளால் கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்தது. வைரஸ் வேகமாக பரவ தொடங்கியது.

இதனால் புதுவை அரசு எல்லைகளில் உள்ள பிரதான சாலைகள் மட்டுமின்றி சிறிய சாலைகளையும், வழிகளையும் தடுப்பு கட்டைகளை வைத்து யாரையும் நுழையவிடாமல் தடுத்தனர்.

அண்டை மாநிலங்களில் இருந்து வந்த அரசு ஊழியர்கள், புதுவையை சேர்ந்தவர்கள் அடையாளங்களை காட்டிய பிறகு அனுமதிக்கப்பட்டனர்.

இந்த கெடுபிடிகள் காரணமாக தமிழகத்திலிருந்து புதுவைக்கு வந்து பணி செய்பவர்கள், வியாபாரம் செய்பவர்கள் வர முடியாத நிலை ஏற்பட்டது.

இதையடுத்து கடலூர், விழுப்புரம் மாவட்ட போலீசார் புதுவை மக்களை தங்கள் பகுதிக்குள் நுழையவிடாமல் தடுத்தனர். தமிழகத்தோடு பூகோள ரீதியாக புதுவை பின்னி பிணைந்த பகுதி என்பதால் புதுவையை சேர்ந்த மக்கள் தமிழக பகுதியை தாண்டி புதுவைக்கு செல்ல தடுக்கப்பட்டனர்.

இதனால் இரு மாநில எல்லைகளிலும் பிரச்சினைகள் உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டது.

இதனையடுத்து உயரதிகாரிகள் மட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு அத்தியாவசிய தேவைக்காக செல்பவர்களை தடுத்து நிறுத்துவதில்லை என முடிவு செய்தனர்.

இதனால் எல்லை பகுதிகளில் நேற்று பகலில் இருதரப்பு மக்களும் நடமாட தொடங்கினர். அதேநேரத்தில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் நேற்று திறக்கப்பட்டது. இதனால் புதுவையை சேர்ந்த மது பிரியர்கள் கடலூர், விழுப்புரம் மாவட்ட எல்லைக்கு அருகில் இருந்த டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு படையெடுத்தனர்.

இருசக்கர வாகனங்களில் சென்ற அவர்கள் அந்த மாவட்டத்தில் உள்ள உறவினர்களின் மூலமாக மதுபானங்களை வாங்கினர். நேற்று பகலில் இருந்தே டாஸ்மாக் மதுபானங்கள் புதுவைக்குள் தாராளமாக நுழைய தொடங்கிவிட்டது.

வழக்கமாக புதுவைக்குத்தான் பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள் வந்து மதுபானங்களை வாங்கி செல்வார்கள். ஆனால், தற்போது நிலைமை தலைகீழாக மாறி புதுவையை சேர்ந்தவர்கள் தமிழகத்திற்கு சென்று மதுபானங்களை பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனை நொந்துகொண்ட மது பிரியர்கள் எல்லாம் சத்திய சோதனை என புலம்பி வருகின்றனர்.


Similar News