செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

ஜிப்மரில் 6 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை- இயக்குனர் தகவல்

Published On 2020-05-08 14:36 IST   |   Update On 2020-05-08 14:36:00 IST
ஜிப்மரில் இதுவரை 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக புதுவை ஜிப்மர் இயக்குனர் ராகேஷ் அகர்வால் கூறினார்.
புதுச்சேரி:

புதுவை ஜிப்மர் இயக்குனர் ராகேஷ் அகர்வால் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஜிப்மர் ஆய்வகம் புதுவையில் உள்ள அனைத்து மருத்துவமனைகளின் கோவிட்-19 பரிசோதனையை மேற்கொண்டு வருகிறது.

புதுவை, தமிழகம், ஆந்திரா மாநில ஆய்வகங்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது. கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரியில் ஆர்.டி. பி.சி.ஆர். பரிசோதனையில் இணைந்து பணியாற்றியுள்ளது. ஜிப்மரில் இதுவரை 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. உள்ளூர் மக்களின் நலனை கருத்தில்கொண்டு அனைத்து அவசர சிகிச்சை பிரிவுகளையும் தொடர்ந்து இயங்க செய்தது.

மண்டல புற்றுநோய் சிகிச்சை மையத்தில் நாள்தோறும் 90 நோயாளிகளுக்கு கீமோதெரபி, கதிரியக்க சிகிச்சை அளிக்கப்பட்டது. தினமும் 20 அறுவை சிகிச்சைகளும், 20 அதிக சிக்கலான பிரசவங்களும் பார்க்கப்பட்டுள்ளது. 600 பேர் உள் நோயாளியாக உள்ளனர். மருத்துவமனையில் ரத்த வங்கியும் தொடர்ந்து இயங்கி வருகிறது. மருத்துவமனை ஊழியர்களும் ரத்தம் வழங்கி முக்கிய பங்காற்றினர்.

ஜிப்மர் தற்போது குறிப்பிட்ட வெளிப்புற சேவைகளை தொடங்கியுள்ளது. இந்த சேவைகளை பெற 0413- 2298200 என்ற எண்ணில் முன்பதிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Similar News