செய்திகள்
நல்லக்கண்ணு

அரசின் செயல்பாடுகள் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது- நல்லக்கண்ணு

Published On 2020-02-10 10:23 IST   |   Update On 2020-02-10 10:23:00 IST
வாக்கி டாக்கி ஊழல் வழக்கை பார்க்கும்போது மாநில அரசின் செயல்பாடுகளில் சந்தேகம் ஏற்படுகிறது என்று நல்லக்கண்ணு கூறியுள்ளார்.
திருச்சி:

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு திருச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் இந்தாண்டு நெல் விளைச்சல் நன்றாக உள்ளது. ஆனால், அவற்றுக்கு உரிய விலை நிர்ணயிக்கப்படாததாலும், விளைந்த நெல்லை வாங்க ஆளில்லாததாலும் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பல இடங்களில் இதுவரை நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படவில்லை. எனவே அரசு தலையிட்டு உடனடியாக தேவையான இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்களை தொடங்க வேண்டும்.

தமிழ்நாட்டில் மணல் கொள்ளை தடுத்து நிறுத்தப்பட வேண்டும். படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்கே சென்று நடிகர் விஜயிடம் விசாரணை நடத்த வேண்டிய அவசியமில்லை. மத்திய அரசு ஒரு சார்பான முறையில் பழிவாங்கும் வகையில் நடந்து கொள்கிறது.

வாக்கி டாக்கி ஊழல் வழக்கை பார்க்கும்போது மாநில அரசின் செயல்பாடுகளில் சந்தேகம் ஏற்படுகிறது. டி.என்.பி.எஸ்.சி. ஊழலில் அமைச்சர்களுக்கு தொடர்பு உள்ளதா? என்பதை முறையாக விசாரணை நடத்தி தெரியப்படுத்த வேண்டும்.

குடியுரிமை சட்டத்தின்கீழ் இங்குள்ள இலங்கை தமிழர்களுக்கும் குடியுரிமை வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கையில் உள்ள தமிழர்கள் அந்நாட்டு அரசால் புறக்கணிக்கப்படுகின்றனர். கொடுமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். இதை தடுத்து நிறுத்துமாறு இலங்கை அரசிடம் பிரதமர் மோடி வலியுறுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News