அமைச்சர்கள் ஆதரவாக பேசியது வரவேற்கத்தக்கது- கி.வீரமணி பேட்டி
புதுக்கோட்டை:
திராவிடர் கழகம் சார்பில் புதுக்கோட்டையில் நீட் தேர்வு தொடர்பான கூட்டம் நடைபெற்றது. இதில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
தற்போது தமிழகத்தில் பெரிய சர்ச்சை ஏற்பட்டுள்ளது. பெரியாரை பற்றி யார் என்ன பேசினாலும் அவரை ஒன்றும் செய்ய முடியாது. அவர் இன்னமும் வாழ்ந்து வருகிறார். இன்னமும் லைவ் ஆகத்தான் உள்ளார். பெரியார் மின்சாரம் போன்றவர். மின்சாரத்தை தவறாக பயன்படுத்துவதற்கு தக்க பாடம் கற்று கொடுக்கும் என்றார்.
தஞ்சை பெரிய கோவில் சர்ச்சை தொடர்பாக பேசுகையில், தற்போது குடமுழுக்கு, கும்பாபிஷேகம் என்ற பட்டிமன்றம் நடை பெற்று வருகிறது. இது ஆரியர்களுக்கும், திராவிடர்களுக்கும் உள்ள பிரச்சினையாக பார்க்க வேண்டும் என்றார்.
பின்னர் கி.வீரமணி நிருபர்களிடம் கூறுகையில், ரஜினிகாந்த் விவகாரத்தில் நாங்கள் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. யாரை எங்கு வைக்க வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். தந்தை பெரியார் அனைவருக்கும் சொந்தமானவர். அந்த வெளிப்பாடுதான் இந்த விவகாரத்தில் அ.தி.மு.க. அரசு ஆதரவாக பேசியுள்ளது வரவேற்கத்தக்கது என்றார்.