செய்திகள்
ரெயிலில் அலங்காரம் செய்து பயணிகள் ஆயுத பூஜை கொண்டாடிய காட்சி

வாழை தோரண அலங்காரத்துடன் சென்னை ரெயிலில் ஆயுத பூஜை கொண்டாடிய பயணிகள்

Published On 2019-10-04 06:15 GMT   |   Update On 2019-10-04 06:05 GMT
அரக்கோணம் அருகே ரெயில் பயணிகள் ரெயில் பெட்டியில் வாழை மரம் கட்டி அலங்கரித்து பூஜை செய்து, ஆயுத பூஜை கொண்டாடினர்.
வேலூர்:

வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள சோழிங்கபுரம் ரெயில் நிலையத்திலிருந்து பாணாவரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் தினமும் சென்னைக்கு சென்று வருகின்றனர்.

ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை சென்ட்ரல் செல்லும் ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் இவர்கள் காலையில் செல்வது வழக்கம். பயணிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து தங்களது பயணம் சிறப்பாகவும் மற்றும் பாதுகாப்பாக அமைய வேண்டி ரெயிலில் ஆயுத பூஜை செய்ய முடிவு செய்தனர்.

இன்று காலை ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரெயில் சோளிங்கபுரம் ரெயில் நிலையம் வந்தது. ஆயுத பூஜைக்கான பொருட்களுடன் தயார் நிலையில் இருந்த பயணிகள் ரெயில் பெட்டி வாசலில் வாழை மரங்களை கட்டினர்.



மேலும் ரெயில் பெட்டிக்குள் வண்ண பேப்பர்களால் அலங்காரம் செய்தனர். ரெயில் பெட்டியில் உள்ள இருக்கைகள் உட்பட அனைத்தையும் சுத்தம் செய்து அதில் சாமி படம் வைத்து பொரி, கடலை, இனிப்பு உள்ளிட்டவற்றை படையலாக வைத்தனர்.

தொடர்ந்து கற்பூரம் ஏற்றி பூஜை செய்தனர். இதில் அந்த பெட்டியில் இருந்த பயணிகள் அனைவரும் கலந்துகொண்டனர்.

பூஜை முடிந்ததும் ரெயில் பயணிகளுக்கு பொரி, கடலை, இனிப்பு போன்றவை வழங்கப்பட்டன. இறுதியாக ரெயில் பெட்டியை சுற்றி தேங்காய் உடைத்து வேண்டுதலை நிறைவேற்றினர்.

காவேரிபாக்கம், பாணாவரம் பகுதியை சேர்ந்த நாங்கள் தினமும் இந்த ரெயிலில் தான் சென்னைக்கு சென்று வருகிறோம். எங்களுடைய பயணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக ரெயிலில் ஆயுத பூஜை செய்து வழிபட்டோம் என்றனர்.

இந்த சம்பவத்தால் ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News