செய்திகள்
கோப்புப்படம்

வேதாரண்யம் மீனவர்கள் 4 பேர் கைது- இலங்கை கடற்படை நடவடிக்கை

Published On 2019-10-03 11:03 GMT   |   Update On 2019-10-03 11:03 GMT
நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி வேதாரண்யத்தை சேர்ந்த 4 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது.
வேதாரண்யம்:

நாகை மாவட்டத்தில் நாகை, வேதாரண்யம், கோடியக்கரை, ஆறுக்காட்டுத்துறை, புஷ்பவனம் உள்ளிட்ட பகுதிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடித்து வருகின்றனர். இதனால் அவ்வப்போது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் மீனவர்களை கைது செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் இன்று வேதாரண்யம் பகுதியை சேர்ந்த 4 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுக்காட்டுத்துறையை சேர்ந்தவர் ராமு (வயது 40). இவர் தனக்கு சொந்தமான பைபர் படகில் அதே பகுதியை சேர்ந்த மீனவர்கள் கஜேந்திரன், ராஜேந்திரன், பழனிவேல் ஆகியோருடன் நேற்று மதியம் மீன்பிடிக்க சென்றார்.

அவர்கள் 4 பேரும் இன்று காலை நெடுந்தீவு அருகே படகில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு இலங்கை கடற்படையினர் படகில் வந்தனர். திடீரென ஆறுக்காட்டுத்துறை மீனவர்கள் வந்த படகை அவர்கள் சுற்றி வளைத்தனர்.

பின்னர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி மீனவர்கள் 4 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்கள் வைத்திருந்த வலைகள், மற்றும் கருவிகள், மீன்களையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து கைதான மீனவர்கள் 4 பேரையும் காங்கேசன் துறைமுகத்துக்கு அழைத்துசென்று விசாரணை நடத்தினர்.

ஆறுக்காட்டுத்துறை மீனவர்கள் 4 பேரை, இலங்கை கடற்படையினர் பிடித்து சென்ற தகவல் இன்று காலை வேதாரண்யம் பகுதியை சேர்ந்த மீனவர்களுக்கு தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் இந்த தகவலை கடலோர காவல் படை போலீசாருக்கு தெரிவித்தனர்.

இலங்கை கடற்படையினர் பிடித்து சென்ற 4 பேரையும் பத்திரமாக மீட்டு தரக்கோரி மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News