முகநூலில் வளர்ந்த முறைகெட்ட காதல்: கல்லூரி மாணவருடன் இளம்பெண் ஓட்டம்
பொன்னமராவதி:
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பெரியார் நகரை சேர்ந்த சுப்பையா மகன் மணிகண்ட பிரபு (வயது 20). புதுக்கோட்டையில் உள்ள கல்லூரியில் பி.காம்., இறுதியாண்டு படித்து வந்தார். இந்த நிலையில் இவருக்கும், மலேசிய நாட்டில் வசித்து வரும் பிரியா (35) என்பவருக்கும் ‘பேஸ்புக்’ மூலம் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் காதலாக மாறியது. இருவரும் பேஸ்புக் மூலம் தங்களது காதலை வளர்த்து வந்தனர்.
பிரியாவுக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது. இருப்பினும் அவர் மணிகண்ட பிரபுவை காதலித்து வந்துள்ளார். தன்னை விட 15 வயது குறைந்தவர், கல்லூரி மாணவர் என்று தெரிந்தும் கூட, பிரியா காதலை கைவிட வில்லை. மகனின் முறைகெட்ட காதலை அறிந்த பெற்றோரும் அவரை கண்டித்துள்ளனர். ஆனாலும் அவர் தன்னை திருத்திக்கொள்ள வில்லை.
பேஸ்புக் மூலம் பேசி பழகி வந்த அவர்கள் நேரில் சந்தித்து பேசவும் முடிவு செய்தனர். அதன்படி பிரியா, தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதாக குடும்பத்தினரிடம் கூறிவிட்டு, மலேசியாவில் இருந்து தஞ்சைக்கு புறப்பட்டு வந்தார்.
இந்த நிலையில் நேற்று வீட்டில் இருந்து வெளியே சென்ற மணிகண்டபிரபு அதன்பிறகு வீடு திரும்ப வில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்க வில்லை. இதையடுத்து மணிகண்ட பிரபுவின் தாய் அன்புராசு பொன்னமராவதி போலீசில் புகார் செய்தார்.
புகாரில், தனது மகனை பிரியா கடத்தி சென்று விட்டதாகவும், எனவே அவனை மீட்டு தரவேண்டும் என்றும் கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி மணிகண்டபிரபுவை தேடி வருகின்றனர்.
மலேசியாவில் இருந்து தஞ்சை வந்த பிரியா, மணி கண்டபிரபுவை அழைத்து கொண்டு வெளியூருக்கு ஓட்டம் பிடித்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி 2 பேரையும் தேடி வருகின்றனர்.