செய்திகள்
மனுக்கள் கீழே சிதறி கிடந்த காட்சி.

டி.என்.பாளையம் அருகே கிராம சபை கூட்டத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறிய அதிகாரிகள்

Published On 2019-08-16 11:48 IST   |   Update On 2019-08-16 11:48:00 IST
டி.என்.பாளையம் அருகே மக்களின் காரசார கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் கிராம சபை கூட்டத்தில் இருந்து அதிகாரிகள் பாதியிலேயே வெளியேறியதை கண்டித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆப்பக்கூடல்:

டி.என்.பாளையம் அருகே உள்ள கொங்கர்பாளையம் ஊராட்சியில் நேற்று காலை கிராம சபா கூட்டம் நடந்தது.

பொதுமக்கள் சுமார் 350-க்கும் மேற்பட்டோர் தங்களின் கோரிக்கை மனுக்களுடன் கலந்து கொண்டனர்.

ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் பெயரளவிற்கே வந்திருந்தனர். மக்களின் காரசார கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் அதிகாரிகள் திணறினர்.

இதனால் சரியாக கூட்டம் நடத்த முடியாமல் மக்களிடம் பெற்ற மனுக்களை அங்கேயே போட்டு விட்டு அதிகாரிகள் பாதியிலேயே சென்றனர்.

பொதுமக்கள் பார்வைக்கு எந்த ஒரு தீர்மான புத்தகங்களும் வைக்கப்படவில்லை. எனவே பொதுமக்கள் கோரிக்கைகளை தீர்மானமாக எழுதாத அதிகாரிகளை கண்டித்து வாயில் கருப்பு துணி கட்டி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து பொதுமக்கள் கூறும் போது, கொங்கர்பாளையம் ஊராட்சியில் பல்வேறு நிதி முறைகேடுகள் நடந்துள்ளது. 100 நாள் வேலை திட்டத்தில் பணிக்கே வராதவர்கள் கணக்கில் ஆயிரக்கணக்கில் பணம் செலுத்தப்பட்ட ஆதாரம் உள்ளது.

12 ஆண்டுகளாக பணித்தள பொறுப்பாளர்களாக குறிப்பிட்ட 3-பேர் தொடர்ந்து இருந்து வருகிறார்கள்.

இது சம்மந்தமாக மாவட்ட கலெக்டரிடம் குறை தீர்ப்பு முகாமில் மனு ஏற்கனவே கொடுக்கப்பட்டு உள்ளது என்றனர்.

மேலும் கூட்டத்தில் பொது மக்களிடம் பெற்ற கோரிக்கை மனுக்களை அங்கேயே போட்டுவிட்டு சென்றது அப்பகுதி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.


கிராம சபா கூட்டத்தில் எந்த ஒரு தீர்மானமும் நிறைவேற்றப்படாமல் சென்ற அதிகாரிகள் மீண்டும் பங்களாபுதூர் போலீசார் முன்னிலையில் சமாதான பேச்சில் ஈடுபட்ட போது அப்பகுதி மக்களின் கேள்வி கணைகளை சமாளிக்க முடியவில்லை.

எனவே மாவட்ட கலெக்டர் தலைமையில் சிறப்பு கிராம சபா கூட்டம் நடத்தி முறைகேடு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு மக்கள் குறைகள் களையப்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் கூறினர்.

Similar News