விளையாட்டு

சம்மேளனத்தை விமர்சித்த விவகாரம்: பாகிஸ்தான் ஹாக்கி அணியின் கேப்டன் மீதான தடைநீக்கம்

Published On 2026-02-21 06:46 IST   |   Update On 2026-02-21 06:46:00 IST
  • இடைக்கால தலைவராக முகைதீன் அகமது வானி நியமிக்கப்பட்டுள்ளார்.
  • கேப்டன் அமாத் ஷகீல் பட்டுக்கு விதிக்கப்பட்ட தடை சட்டவிரோதமானது.

லாகூர்:

புரோ ஹாக்கி லீக்கில் ஆஸ்திரேலியாவுக்கு சென்று ஆடிய பாகிஸ்தான் அணி அங்கு நடந்த 4 ஆட்டங்களிலும் (ஜெர்மனி மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தலா 2 ஆட்டம்) படுதோல்வி அடைந்தது. போட்டி முடிந்து தாயகம் திரும்பிய பாகிஸ்தான் அணியின் கேப்டன் அமாத் ஷகீல் பட் பாகிஸ்தான் ஹாக்கி சம்மேளனத்தை கடுமையாக சாடினார்.

'ஆஸ்திரேலியா சென்ற நாங்கள் தங்குவதற்கு ஓட்டலுக்கு முன்பணம் கட்டாததால் சாலையில் சில மணி நேரம் தவித்தோம். அதன் பிறகு ஏற்பாடு செய்து தரப்பட்ட இடத்தில் போதிய வசதிகள் கிடையாது. பாத்திரங்களை கழுவி சமையலறையை சுத்தம் செய்ய வேண்டியது இருந்தது. துணிகளையும் நாங்களே துவைக்கும் நிலை ஏற்பட்டது. பிறகு எப்படி போட்டியில் முழு கவனம் செலுத்த முடியும்' என்று தெரிவித்து இருந்தார். அத்துடன் பாகிஸ்கான் ஹாக்கி சம்மேளன நிர்வாகக்கை முழுமையாக கலைக்க வேண்டும் என்று வலிறுத்திய அவர் பெரும்பாலான வீரர்களுக்கு கடந்த ஒரு ஆண்டாக தினசரி படி வழங்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.

இதைத்தொடர்ந்து பாகிஸ்தான் ஹாக்கி சம்மேளனத்தின் புகழுக்கு களம் ஏற்படுத்தியதாக கேப்டன் ஷகில் பட்டுக்கு 2 ஆண்டு தடை விதித்து பாகிஸ்தான் ஹாக்கி சம்மேளன தலைவர் தாரிக் புக்தி நடவடிக்கை எடுத்ததுடன் தனது பதவியையும் ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை பாகிஸ்தான் ஹாக்கி சம்மேளன தலைமை புரவலரும், பிரதமருமான ஷபாஸ் ஷெரீப்புக்கு அனுப்பினார்.

இந்த நிலையில் அவரது ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டு, இடைக்கால தலைவராக முகைதீன் அகமது வானி நியமிக்கப்பட்டுள்ளார். டைரக்டர் ஜெனரலாக முஸ்ரத்துல்லா நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். அத்துடன் கேப்டன் ஷகீல் பட் மீதான 2 ஆண்டு தடையை அதிரடியாக நீக்கி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவருக்கு விதிக்கப்பட்ட தடை சட்டவிரோதமானது. அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று இடைக்கால தலைவர் முகைதீன் அகமது வானி குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News