செய்திகள்

விபத்தில் பலியான வியாபாரி குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி

Published On 2019-06-05 05:35 GMT   |   Update On 2019-06-05 05:35 GMT
விபத்தில் பலியான வியாபாரி குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.

வேலூர்:

வேலூர் விருபாட்சி புரத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 45), அரிசி வியாபாரி. இவர் கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27-ந் தேதி இரவு வேலை முடிந்ததும் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

வேலூர் சாய்நாதபுரம் பஸ் நிறுத்தம் அருகே சென்ற போது எதிரே திருவண்ணாமலையிலிருந்து வந்த அரசு பஸ் சைக்கிள் மீது மோதியது. இதில் வெங்கடேசன் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து பாகாயம் போலீசார் வழக்குபதிவு செய்தனர்.

விபத்தில் பலியான வெங்கடேசன் குடும்பத்தினர் தங்களுக்கு இழப்பீடு வழங்கக்கோரி வேலூர் முதலாவது கூடுதல் மாவட்ட அமர்வு கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். அதனை விசாரித்த நீதிபதி வெற்றிச்செல்வி, விபத்து இழப்பீடாக வெங்கடேசன் குடும்பத்திற்கு ரூ.13 லட்சத்து 22 ஆயிரத்து 780-ஐ வழங்கும் படி திருவண்ணாமலை மண்டல அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு உத்தரவிட்டார்.

ஆனால் அரசு போக்கு வரத்துக்கழக அதிகாரிகள் இழப்பீடு தொகையை வழங்காமல் காலம் கடத்தி வந்தனர். இதையடுத்து திருவண்ணாமலை மண்டல அரசு போக்குவரத்துக்கழக பஸ்சை ஜப்தி செய்யும்படி நீதிபதி வெற்றிச் செல்வி உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து கோர்ட்டு ஊழியர்கள் நேற்று மாலை வேலூர் புதிய பஸ் நிலையத்துக்கு வந்தனர். அப்போது பெங்களூருவில் இருந்து வேலூர் வழியாக வந்தவாசிக்கு செல்லும் திருவண்ணாமலை மண்டல அரசு போக்குவரத்துக்கழக பஸ் வந்தது.

அந்த பஸ்சை கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்தனர். பின்னர் அந்த பஸ் கோர்ட்டு வளாகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதையறிந்த அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் 3 நாட்களுக்குள் விபத்து இழப்பீடு தொகையை வழங்குவதாக எழுத்தூப்பூர்வமாக கோர்ட்டில் வழங்கினர். அதைத்தொடர்ந்து பஸ் வடுவிக்கப்பட்டது.

Tags:    

Similar News