திருப்பத்தூர் அருகே மனைவியை கொன்று வாலிபர் தற்கொலை
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் அடுத்த குரிசிலாப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் முருகன் ( வயது 30). பேண்ட் வாத்திய இசை கலைஞர். இவருடைய மனைவி சின்னபாப்பா (28). தம்பதிக்கு 8 வயதில் ஒரு மகளும், 3 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.
முருகன் தினமும் குடித்துவிட்டு வந்து சின்ன பாப்பாவிடம் தகராறு செய்து வந்தார். நேற்றிரவு கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.
இன்று காலை மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த முருகன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மனைவியின் கழுத்து, முதுகில் சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த சின்னபாப்பா துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
ஆத்திரத்தில் மனைவியை கொன்றுவிட்டோமே என்று அதிர்ச்சியடைந்த முருகன் தானும் வாழ்வதை விட சாவதே மேல் என்று கருதி மனைவியின் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மனைவி பிணத்தின் மீது அவரது உடலும் கிடந்தது.
இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் குரிசிலாப்பட்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து கணவன், மனைவி பிணத்தை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
அனாதையான 2 குழந்தைகளும் தாய், தந்தையின் உடலை பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.
மனைவியை வெட்டி கொலை செய்து தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.