டி.பி.சத்திரத்தில் கல்லூரி மாணவரை கடத்திய காதலி உள்பட 3 பேர் கைது
போரூர்:
சென்னை டி.பி.சத்திரம் ராமநாதன் தெருவை சேர்ந்தவர் நவீத் முகமது (19). கல்லூரி மாணவரான இவரை கடந்த 9-ந் தேதி 3 பேர் கும்பல் மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்றது. பின்னர் அவரை சரமாரியாக தாக்கி ஜாபர்கான்பேட்டை மேம்பாலம் அருகே முட்புதரில் வீசினர்.
நவீத் முகமதுவிடம் இருந்து ஐபோன், விலை உயர்ந்த வாட்சை பறித்துவிட்டு தப்பியது. அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இது குறித்து டி.பி. சத்திரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் நவீத் முகமதுவும், அமெரிக்காவில் வசித்து வந்த இளம் பெண்ணும் காதலித்துள்ளனர்.
சென்னை வந்த காதலி ஒரு ஓட்டலில் தங்கி இருந்தார். அப்போது அங்கு சென்ற நவீத் முகமதுவுக்கும், காதலிக்கும் தகராறு ஏற்பட்டது. செல்போனில் இருக்கும் நெருக்கமான படத்தை அழிக்க நவீத் முகமது மறுத்ததால் அப்பெண் சண்டை போட்டார். இதில் காதலியை சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதுபற்றி அப்பெண் தனது நண்பர்கள்கோகுல், அபிஷேக் ஆகியோரிடம் தெரிவித்தார். இதையடுதுது அவர்கள் ஏற்பாட்டின் பேரில் வேளச்சேரியை சேர்ந்த பாஸ்கர், அவரது தம்பியான 17 வயது சிறுவன் மற்றும் நண்பர் சரவணன் ஆகியோர் நவீத் முகமதுவை கடத்தி சென்று தாக்கி செல்போன்னை பறித்தது தெரிய வந்தது.
இவ்வழக்கு தொடர்பாக பாஸ்கர், அவரது நண்பர் சரவணன் ஆகிய இருவரையும் போலீசார் ஏற்கனவே கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் நவீத் முகமதுவின் காதலி, அவரது நண்பர்கள் கோகுல், அபிஷேக் ஆகிய 3 பேரையும் நேற்று போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.