செய்திகள்

கோயம்பேட்டில் அதிகாரிகள் சோதனை- சுகாதாரமற்ற 500 குடிநீர் கேன்கள் பறிமுதல்

Published On 2019-05-15 06:19 GMT   |   Update On 2019-05-15 06:19 GMT
கோயம்பேடு மெட்ரோ ரெயில் நிலையம் அருகே இன்று காலை அதிகாரிகள் நடத்திய சோதனையில் சுகாதாரமற்ற 500 குடிநீர் கேன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
போரூர்:

சென்னையில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதன் காரணமாக பொது மக்கள் குடிநீர் கேன்களை அதிக அளவில் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைக்கு கேன்கள் மூலம் அடைக்கப்பட்ட குடிநீர் அதிக அளவு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

இதில் காலாவதியான மற்றும் சுகாதாரமற்ற கேன்களில் குடிநீர் வருவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.

இதையடுத்து சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் ராமகிருஷ்ணன் உத்தரவின் பேரில் சென்னை முழுவதும் சோதனை நடத்தி தரமற்ற குடிநீர் கேன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர்.

இன்று காலை கோயம்பேடு மெட்ரோ ரெயில் நிலையம் அருகில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ராமராஜ், சதாசிவம் ஆகியோர் தலைமையில் தண்ணீர் கேன்கள் ஏற்றி வந்த ஆட்டோ, வேன் உள்ளிட்ட 11 வாகனங்களை மடக்கி சோதனை நடத்தினர்.

அப்போது அதில் இருந்த 500-க்கும் மேற்பட்ட கேன்களில் தயாரிப்பு தேதி குறிப்பிடாமலும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளால் வழங்கப்பட்ட தரச்சான்று காலாவதியாகி புதுப்பிக்க படாமலும் சுத்தமற்ற கேன்களில் குடிநீர் கொண்டு செல்வதும் கண்டு பிடிக்கப்பட்டது. உடனடியாக 500 கேன்களையும் பறிமுதல் செய்தனர்.

தரமற்ற குடிநீர் கேன்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
Tags:    

Similar News