செய்திகள்

சேலத்தில் இருந்து வந்த சென்னை பஸ்சில் வியாபாரியிடம் ரூ.25 லட்சம் வைர நகை கொள்ளை

Published On 2019-05-13 06:15 GMT   |   Update On 2019-05-13 06:15 GMT
சேலத்தில் இருந்து வந்த சென்னை பஸ்சில் வியாபாரியிடம் ரூ.25 லட்சம் வைர நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போரூர்:

திருச்சியைச் சேர்ந்தவர் தாராசந்த். தங்கம் மற்றும் வைர நகை வியாபாரி. இவர் ஆர்டரின் பேரில் சென்னையில் உள்ள சிறிய நகை கடைகளுக்கு நகைகள் சப்ளை செய்து வருகிறார்.

இந்தநிலையில் கடந்த 7-ந் தேதி சென்னையில் உள்ள கடைகளுக்கு நகைகள் கொண்டு செல்வதற்காக சேலத்தில் இருந்து அரசு பஸ் மூலம் கோயம்பேடுக்கு வந்தார்.

மதியம் 2மணி அளவில் தாராசந்த் கோயம்பேடு பஸ் நிலையத்தில் இறங்கிய போது தான் கொண்டு வந்த பையில் வைர நகைகள் அடங்கிய பெட்டி மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

அதில் 23 வைர வளையல்கள் இருந்தன. பஸ்சில் உடன் பயணம் செய்த மர்ம நபர்கள் வைர நகைகள் இருந்த பெட்டியை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்தது.

இதன் மதிப்பு சுமார் ரூ.25லட்சம் ஆகும். தாராசந்த் நகையுடன் பஸ்சில் ஏறுவதை நோட்டமிட்ட கொள்ளை கும்பல் அவருடன் வந்துள்ளனர். பின்னர் அவர் அசந்த நேரத்தில் நகையை கொள்ளையடித்து தப்பி சென்று இருப்பது தெரிய வந்துள்ளது.

இது குறித்து தாராசந்த் கோயம்பேடு பஸ் நிலைய போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பஸ் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News