செய்திகள்

பெண் போலீசாரை ஆபாசமாக படம் எடுத்த வருவாய் ஆய்வாளர் கைது

Published On 2019-05-12 13:49 GMT   |   Update On 2019-05-12 13:49 GMT
நெல்லை மகளிர் போலீஸ் நிலையத்தில் பெண் போலீசாரை ஆபாசமாக படம் எடுத்த வருவாய் ஆய்வாளர் கைது செய்யப்பட்டார்.

நெல்லை:

பாளை சீவலப்பேரி கல்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் நடராஜன் (வயது30). இவர் கயத்தாறில் இளநிலை வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். நடராஜனுக்கும், அவரது மனைவி முருகம்மாள் (29) என்பவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.

இதனால் தனது தாய் வீட்டில் வசித்து வரும் முருகம்மாள், தனது கணவர் மீது பாளை தாலுகா அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.அதன் பேரில் மகளிர் போலீசார், நடராஜன் மற்றும் அவரது மனைவியை போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து விசாரணை நடத்தினர்.

அப்போது தனது நகைகளை கணவர் நடராஜன் அடமானம் வைத்துள்ளதாக முருகம்மாள் புகார் தெரிவித்தார். அதனை மீட்டு மனைவியிடம் வழங்குமாறு போலீசார் அறிவுறுத்தினர். ஆனால் நடராஜன் மனைவியின் நகைகளை மீட்டு கொடுக்கவில்லை. இது தொடர்பான பேச்சுவார்த்தைக்காக கணவன்-மனைவி இருவரும் அடிக்கடி மகளிர் போலீஸ் நிலையத்திற்கு வந்து சென்றுள்ளனர்.

அப்போது தன்னை செல்போனில் படம் பிடித்து வைத்துள்ளதாக போலீசில் முருகம்மாள் தெரிவித்தார். இதையடுத்து நடராஜனின் செல்போனை வாங்கி மகளிர் போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அதில் ஏராளமான ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்கள் இருந்தன.

மேலும் மகளிர் போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்த பெண் போலீசாரை, அவர்களுக்கே தெரியாமல் மோசமான கோணங்களில் படம் எடுத்து வைத்திருந்தார். போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு வந்த போது பெண் போலீசாரை அவர் தனது செல்போனில் ரகசிய மாக படம் எடுத்துள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மகளிர் போலீஸ் நிலைய ஏட்டு பாளை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் ஆபாச படங்கள் வைத்திருந்தது, பெண் போலீசாரை அனுமதி இல்லாமல் செல்போனில் படம் பிடித்தது ஆகிய பிரிவின் கீழ் நடராஜன் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர். 

Tags:    

Similar News