செய்திகள்

திருப்பூரில் பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் பிணமாக கிடந்த புதுப்பெண்

Published On 2019-05-11 05:05 GMT   |   Update On 2019-05-11 05:05 GMT
திருப்பூரில் பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் புதுப்பெண் பிணமாக கிடந்தது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர்:

திருப்பூர் அவினாசி ரோடு பங்களா பஸ் நிறுத்தம் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. இவர் காந்தி நகர் பகுதியில் பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார்.

வெளியூரில் இருந்து வரும் தொழிலாளர்கள் தங்கி வேலை செய்யும் வசதிக்காக பனியன் உரிமையாளர் திருமுருகன்பூண்டி நெசவாளர் காலனியில் உள்ள தோட்டத்தில் 10 வீடுகளை கட்டி கொடுத்துள்ளார்.

இதில் பூட்டியிருந்த 4-வது வீட்டில் இருந்து நேற்று துர்நாற்றம் வீசியது. அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியே எட்டிப்பார்த்தபோது அங்கு அழுகிய நிலையில் இளம்பெண் உடல் கிடந்தது.

இது குறித்து திருமுருகன்பூண்டி போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் பிணமாக கிடந்தவர் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஆவுடையப்பன் கோவில் பகுதியை சேர்ந்த கயல்விழி (வயது 21) என்பது தெரியவந்தது. இவரும் அதே பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்த விக்னேஷ் (22) என்பவரும் காதலித்தனர். பின்னர் 3 மாதங்களுக்கு முன்பு வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டு கணவன்- மனைவியாக வாழ்ந்தனர்.

கணவன்- மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் கயல்விழி தற்கொலை செய்து கொண்டபின்னர் விக்னேஷ் வீட்டை பூட்டி விட்டு தப்பி ஓடிவிட்டாரா? அல்லது கயல்விழியை கொலை செய்து விட்டு வீட்டை பூட்டிச்சென்றாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் விக்னேஷ் குறித்து பனியன் நிறுவனத்தில் விசாரித்தபோது அவர் எந்த ஊர்? என்பது குறித்து எந்த விபரமும் இல்லை. போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News