செய்திகள்

மதுரையில் ஆம்னி பஸ் மோதிய விபத்தில் பெண் போலீஸ் உள்பட 4 பேர் பலி

Published On 2019-05-09 05:00 GMT   |   Update On 2019-05-09 05:00 GMT
மதுரை அருகே மோட்டார்சைக்கிள் மீது ஆம்னி பஸ் மோதிய விபத்தில் பெண் போலீஸ் உள்பட 4 பேர் பரிதாபமாக இறந்தனர்.
மதுரை:

மதுரை ஜெய்ஹிந்துபுரம் ஜீவா நகர் 3-வது தெருவைச் சேர்ந்தவர் நாகப்பன். இவரது மகள் ஜோதி (34). இவர் தல்லாகுளம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணி புரிந்து வந்தார்.

நேற்று நள்ளிரவு ஜோதி, தனது உறவினர்கள் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த சத்தியவாணி (44), அவரது மகள் சூர்யகலா (20) ஆகியோருடன் ஒரே மொபட்டில் வெளியே புறப்பட்டார்.

டி.பி.கே. ரோட்டில் உள்ள தமிழ்நாடு பாலிடெக்னிக் அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது நெல்லையில் இருந்து 50-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றி வந்த ஆம்னி பஸ் தாறுமாறாக ஓடி முன்னாள் சென்று கொண்டிருந்த ஜோதி ஓட்டிவந்த மொபட் மீது மோதியது. அதே வேகத்தில் மற்றொரு மோட்டார் சைக்கிள் மீதும் ஆம்னி பஸ் மோதியது. இதில் மொபட், மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர்.

விபத்தில் ஜோதி, சத்திய வாணி, சூர்யகலா மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த திருச்சி மணப்பாறையைச் சேர்ந்த ஆனந்தன் 28, விக்னேஷ் ஆகியோர் படுகாயமடைந்தனர்.

இதில் சம்பவ இடத்திலேயே ஜோதி, சத்தியவாணி, ஆனந்தன் ஆகியோர் பரிதாபமாக இறந்தனர்.

உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சூர்யகலா, விக்னேஷ் ஆகியோரை அங்கிருந்தவர்கள் மீட்டு உடனடியாக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இன்று காலை சிகிச்சை பலனின்றி சூர்யகலா பரிதாபமாக இறந்தார். இதைத் தொடர்ந்து இந்த விபத்தில் சாவு எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. விக்னேஷ் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

விபத்தில் பலியான சத்தியவாணி விருதுநகர் நகராட்சி அலுவலகத்திலும், ஆனந்தன் மதுரையில் உள்ள ஜவுளிக்கடையிலும் வேலை பார்த்து வந்தனர்.

விபத்து குறித்து தல்லாகுளம் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.#MaduraiAccident
Tags:    

Similar News