வேதாரண்யம் அருகே இலங்கைக்கு படகில் கஞ்சா கடத்த முயன்ற வாலிபர் கைது
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் கடற்பகுதியில் இருந்து மிக அருகாமையில் இலங்கை அமைந்துள்ளது. இதனால் அடிக்கடி கடல்வழியாக தங்கம் மற்றும் கஞ்சா கடத்தல் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இலங்கையில் பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இதைதொடர்ந்து வேதாரண்யம் கடல்வழியாக பயங்கரவாதிகள் வரக்கூடும் என தகவல் வெளியானதால் அங்கு போலீசார் உஷார்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
வேதராண்யம் கடலோர காவல்குழும டி.எஸ்.பி கலிதீர்த்தான், இன்ஸ்பெக்டர் ஜோதிராமலிங்கம் ஆகியோருக்கு வேதாரண்யம் பகுதியில் இருந்து இலங்கைக்கு படகில் கஞ்சா கடத்தப்பட இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் இன்று காலை வேதாரண்யம், ஆறுகாட்டுத்துறை உள்ளிட்ட மீனவ கிராமங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது ஆறுகாட்டுத்துறை கடற்கரை பகுதியில் கஞ்சாவுடன் பதுங்கியிருந்த வாலிபர் ஒருவர் சிக்கினார். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் தஞ்சை மாவட்டம் தம்பிக்கோட்டை சுந்தரம் காலனியை சேர்ந்த செல்லதுரை மகன் பாலமுருகன் (வயது 32) என்பது தெரியவந்தது.
அவர் இலங்கைக்கு படகில் கடத்தி செல்ல வைத்திருந்த 17 கஞ்சா மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். அதில் 34 கிலோ கஞ்சா இருந்தது.
இதுதொடர்பாக பாலமுருகனை போலீசார் கைது செய்து அவருடன் இந்த கடத்தலில் ஈடுபட இருந்த நபர்கள் யார்? யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.