செய்திகள்

பானிப்புயல் எதிரொலி - கொடைக்கானலில் 2 நாட்களுக்கு சுற்றுலா இடங்கள் மூடல்

Published On 2019-04-27 05:16 GMT   |   Update On 2019-04-27 05:16 GMT
பானிப்புயல் உருவாவதையொட்டி கொடைக்கானலில் 2 நாட்களுக்கு சுற்றுலா இடங்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #CycloneFani #TNRains

கொடைக்கானல்:

மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். முக்கிய சுற்றுலா இடங்களான குணாகுகை, பில்லர்ராக், மோயர்பாயிண்ட், கோக்கர்ஸ் வாக், பைன்பாரஸ்ட் என 12 மைல் சுற்றளவில் சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணம் இயற்கை எழிலுடன் உள்ளது.

மேலும் பேரிஜம் ஏரிக்கு செல்லவும் சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுவார்கள். இவை அனைத்தும் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளது.

இது பானிப்புயலாக மாறி வருகிற 29-ந்தேதி வடதமிழகம் மற்றும் தென் ஆந்திரா வழியாக கரையை கடக்க உள்ளது. இதனால் தமிழகத்திற்கு ரெட்அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கடந்த கஜாபுயலின்போது கொடைக்கானல் மற்றும் மேல்மலை, கீழ்மலைகளில் கடுமையாக பாதிக்கப்பட்டன. மரங்கள், மின்கம்பங்கள் முறிந்துவிழுந்து இயல்புநிலை திரும்ப ஒரு மாதத்திற்கும் மேலானது. எனவே தற்போது உருவாகி உள்ள பானிப்புயலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதன் ஒருபகுதியாக கொடைக்கானலில் உள்ள சுற்றுலா இடங்கள் அனைத்தும் பாதுகாப்பு கருதி 29,30 ஆகிய 2 நாட்களுக்கு மூடப்பட்டு இருக்கும் என வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.

மேலும் சேதங்கள் குறித்து ஆய்வு செய்த பின்னர் சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி வழங்கப்படும் என தெரிவித்தனர். #CycloneFani #TNRains

Tags:    

Similar News