செய்திகள்
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு முன்பு பக்தர்களின் பொருட்களை மெட்டல்டிடெக்டர் கருவி மூலம் போலீசார் சோதனை செய்தனர்.

வேளாங்கண்ணி பேராலயத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு

Published On 2019-04-23 05:18 GMT   |   Update On 2019-04-23 05:18 GMT
இலங்கையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயம், தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை உள்ளிட்ட இடங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம்:

இலங்கையில் தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகளில் அடுத்தடுத்து நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 300 பேர் பலியானார்கள். இந்த குண்டு வெடிப்பு சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீசாரின், கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை கடலோர பகுதியை ஓட்டியுள்ள பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அதன் ஒரு பகுதியாக நாகை மாவட்டத்தில் 180 கிலோ மீட்டர் நீளமுள்ள கடற்கரையை கொண்ட 53 மீனவ கிராமங்களில் 24 மணி நேரம் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின் பேரில், 19 சோதனை சாவடிகளில் கண்காணிப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயம், தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை உள்ளிட்ட இடங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

வேளாங்கண்ணி கடற்கரை சாலை, பேராலயத்தின் 4 புறங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்களும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் உடமைகளை மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்த பிறகே பேராலயத்துக்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

இதேபோல் நாகை, வேதாரண்யம், ஆறுக்காட்டுத்துறை, புஷ்பவனம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் கடலோர பாதுகாப்பு படையினரும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
Tags:    

Similar News