செய்திகள்

கிரண்பேடி குறித்து அவதூறு பேச்சு - நாஞ்சில் சம்பத் மீது 3 பிரிவுகளில் வழக்கு

Published On 2019-03-30 06:29 GMT   |   Update On 2019-03-30 06:29 GMT
கவர்னர் கிரண்பேடி குறித்து அவதூறாக பேசிய நாஞ்சில் சம்பத் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. #NanjilSampath #kirenbedi
புதுச்சேரி:

புதுவை பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து தி.மு.க. பேச்சாளர் நாஞ்சில் சம்பத் கடந்த 27-ந் தேதி புதுவையில் தேர்தல் பிரசாரம் செய்தார்.

அப்போது நாஞ்சில் சம்பத் புதுவை கவர்னர் கிரண்பேடி குறித்து தரக்குறைவாகவும், அவதூறாகவும் பேசியதாக சர்ச்சை எழுந்தது.

இதனையடுத்து புதுவை மாநில பாரதிய ஜனதா பொதுச்செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை தேர்தல் ஆணையாளர் கந்தவேலு, போலீஸ் டி.ஜி.பி. சுந்தரி நந்தா ஆகியோரிடம் புகார் செய்தனர்.

புகாரில் கவர்னரின் பாலினம் குறித்தும், அவருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையிலும் தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி நாஞ்சில் சம்பத் பேசியதாக கூறி இருந்தார். மேலும் நாஞ்சில் சம்பத் பேசியதற்கான ஆதாரத்தை சி.டி.யாகவும் அளித்திருந்தார்.

இந்த நிலையில் புதுவை அரசின் உள்துறை கூடுதல் செயலாளரும், கவர்னரின் சார்பு செயலாளருமான சுந்தரேசன் கவர்னர் கிரண்பேடி குறித்து அவதூறாக பேசிய நாஞ்சில் சம்பத் மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீஸ் டி.ஜி.பி. சுந்தரிநந்தாவிடம் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் டி.ஜி.பி. சுந்தரி நந்தா தவளக்குப்பம் போலீசாருக்கு வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார். அதன் பேரில் தி.மு.க. பேச்சாளர் நாஞ்சில் சம்பத் மீது 294 (ஆபாசமாக திட்டுதல்), 354 ஏ (பெண்மைக்கு களங்கம் ஏற்படுத்துதல்), 509 (புகழுக்கு களங்கம் ஏற்படுத்துதல் )ஆகிய 3 பிரிவுகளின் கீழ் தளக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #NanjilSampath #kirenbedi
Tags:    

Similar News