செய்திகள்

பாராளுமன்ற தேர்தல் - சமூக வலைத்தளங்களை தீவிரமாக கண்காணிக்கும் சைபர் கிரைம்

Published On 2019-03-13 09:22 GMT   |   Update On 2019-03-13 09:22 GMT
பாராளுமன்ற தேர்தல் குறித்து சமூக வலைத்தளங்களை சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

ஈரோடு:

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஈரோடு மாவட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட கலெக்டருமான கதிரவன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் ஆகியோர் இணைந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த உடனேயே பொது இடங்கள் தனியார் இடங்களில் வைக்கப்பட்டுள்ள கட்சி கொடிகள் சின்னம் ஆகியவை அழிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

மேலும் ஈரோடு கலெக்டர் அலுவலகம், அனைத்து துறை அலுவலகங்களிலும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா படங்கள், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி படங்கள் அகற்றப்பட்டுவிட்டன.

நடத்தை விதிமுறைகளை கண்காணிக்க பறக்கும் படை குழுக்கள், நிலை கண்காணிப்பு குழுக்கள், வீடியோ கண்காணிப்பு குழுக்கள் வீடியோ பார்வை குழுக்கள், கணக்கு குழுக்கள் ஆகிய ஐந்து குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

24 மணி நேரமும் செயல்படக்கூடிய தேர்தல் கட்டுப்பாட்டு அறை ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கப்பட்டுள்ளன. பறக்கும் படையினர் தற்போது வாகன சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர். இதே போன்று வீடியோ குழுவினர் தங்கள் சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும் பொதுமக்கள் புகார்களை படத்துடன் தெரிவிக்க தனியாக வாட்ஸ் அப் உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் புகார் கூற விரும்பும் பொதுமக்கள் படத்துடன் புகார் கூறலாம். அதன் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இந்த நிலையில் சமூக வலை தளங்களான வாட்ஸ்- அப், பேஸ்புக் ட்விட்டர் இன்டோஸ்க்ராம் போன்ற சமூக வலைத்தளங்களை சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

தவறான தகவல்கள் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். உதாரணமாக ஒரு சிலர் எங்கள் கட்சிக்கு வாக்களித்தால் குறிப்பிட்ட தொகைக்கு ரீசார்ஜ் செய்து விடுவதாக விளம்பரம் செய்வார்கள்.

இவ்வாறு விளம்பரம் செய்வது தண்டனைக்குரியது. இதனை சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறார்கள். #tamilnews

Tags:    

Similar News