செய்திகள்

அதிமுகவுடன் கூட்டணி வைக்க போட்டி போடுகின்றனர்- அமைச்சர் சிவி சண்முகம்

Published On 2019-03-08 10:43 IST   |   Update On 2019-03-08 10:43:00 IST
எதிர்காலம் நன்றாக இருக்க அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க போட்டி போடுவதாக அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார். #LSPolls #ADMK #CVeShanmugam
விழுப்புரம்:

விழுப்புரத்தில் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில், ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசியதாவது:-

மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளில், அவர் வழிகாட்டியதை போல், ஏழைகள் மற்றும் சமூகத்தில் பின்தங்கிய மக்களுக்காக, நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாடி வருகிறோம்.

அ.தி.மு.க.வில் 1½ கோடி தொண்டர்கள் விசுவாசமாக இருந்தனர். ஆனால் சதி திட்டத்தால், ஒரு கொலைகார கூட்டத்தால் ஜெயலலிதாவை நாம் பறி கொடுத்து விட்டோம். ஜெயலலிதா இறுதியாக சட்டசபை கூட்டத்தில் பேசியபோது, எனக்குப் பின்னரும் 100 ஆண்டுகளுக்கு மேல் அ.தி.மு.க. தமிழக மக்களுக்காக நல்லாட்சி செய்யும் என்றார்.

எதிரிகள் நம் மீது எத்தனை வழக்குகள் போட்டு தடுத்தாலும், ஆட்சியே இருக்காது என கூறியபோதும், ஜெயலலிதா ஆசியால் 2 ஆண்டுகள் சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறோம். அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தையும் மீட்டுள்ளோம்.

அம்மா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. அழிந்தது, அ.தி.மு.க.வுக்கு எதிர்காலம் இல்லை என்று சொன்னவர்கள் தற்போது அ.தி.மு.க.வோடு கூட்டணி வைத்தால்தான் தங்களுக்கு எதிர்காலம் என்று கருதி அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்கும் நிலையை உருவாக்கி காட்டி உள்ளோம். அ.தி.மு.க. நல்லாட்சியை கண்டு பலரும் போட்டி போட்டுக்கொண்டு நம்முடன் கூட்டணி வைக்க வருகின்றனர்.

பிரதமர் மோடியும் நமது சாதனையை பாராட்டியுள்ளார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஸ்டாலின் நடை உடை பாவனை எல்லாம் தான் பிரதமர் ஆகிவிட்டது போல இருந்தது. ஆனால் தற்போது ஸ்டாலின் நிலைமை என்ன? எங்களோடு கூட்டணி வைத்துக் கொள்ளுங்கள் என்று கெஞ்சுகின்ற நிலை இன்று உருவாகி இருக்கிறது.

இவ்வாறு அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார். #LSPolls #ADMK #CVeShanmugam

Similar News