செய்திகள்

நண்பனின் காதலியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டு ஜெயில்

Published On 2019-02-26 10:41 GMT   |   Update On 2019-02-26 10:41 GMT
விருத்தாசலம் அருகே நண்பனின் காதலியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து கடலூர் மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடலூர்:

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தாலுகா பெரியகோட்டிமூளை பகுதியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி(வயது 26). இவரது நண்பர் விஜயேந்திரன். இவருக்கு 16 வயதில் காதலி ஒருவர் உள்ளார்.

கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் 11-ந் தேதி வாலிபர் சத்தியமூர்த்தி தனது நண்பனின் காதலியிடம் விஜயேந்திரன் கோவையில் வி‌ஷம் குடித்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார் அவரை பார்க்க வரும்படி அழைத்தார்.

அதற்கு அந்த இளம்பெண் மறுத்து விட்டார். உடனே சத்தியமூர்த்தி வராவிட்டால் போலீஸ் வழக்கு பதிவாகிவிடும் என மிரட்டினார். இதனைத்தொடர்ந்து அந்த இளம்பெண் சத்தியமூர்த்தியுடன் கோவைக்கு சென்றார். அங்கு சென்றதும் அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லாமல் வேறு ஒரு இடத்திற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

மேலும் அவரை திருப்பூருக்கு அழைத்து சென்று அங்கு வைத்து ஒரு வாரம் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதற்கிடையே இளம்பெண்ணின் பெற்றோர் தன் மகளை காணவில்லை என சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் ஸ்ரீமுஷ்ணம் பஸ்நிலையத்தில் சத்தியமூர்த்தி அந்த இளம்பெண்ணுடன் பஸ்சில் வந்து இறங்கினார். உடனே அங்கு நின்ற போலீசார் சத்தியமூர்த்தியை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை கடலூர் மகிளா நீதீமன்றத்தில் நடந்து வந்தது.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்படும் என்று நீதிபதி லிங்கேஸ்வரன் அறிவித்திருந்தார். அதன்படி இன்று காலை வழக்கு விசாரணை தொடங்கியது. சத்தியமூர்த்தியை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நண்பனின் காதலியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த சத்தியமூர்த்திக்கு 20 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி லிங்கேஸ்வரன் உத்தரவிட்டார்.

இந்தவழக்கில் அரசு சார்பில் வக்கீல் செல்வபிரியா ஆஜராகி வாதாடினார்.
Tags:    

Similar News