நம்பியூரில் இளம்பெண் திடீர் தற்கொலை- போலீசார் விசாரணை
நம்பியூர்:
நம்பியூர் அருகே எலத்தூரை சேர்ந்தவர் மணி. இவரது மகள் கவுசல்யா (வயது 24). நம்பியூர் பெரியார் நகரில் இவர்கள் வசித்து வருகிறார்கள். கவுசல்யா நம்பியூரில் உள்ள ஒரு துணி கடையில் வேலை பார்த்து வந்தார்.
கடந்த 4 ஆண்டுகளாக கவுசல்யாவுக்கு உடல் நிலை சரியில்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் கடந்த சில நாட்களாக அவர் வேலைக்கு போகாமல் வீட்டில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் கவுசல்யாவுக்கு வீட்டில் திருமண ஏற்பாடுகள் நடந்தது. இதனால் அவர் மன உளைச்சலில் இருந்தாராம்.
இந்த நிலையில் நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாத போது கவுசல்யா தனது துப்பட்டாவால் தூக்குபோட்டு தொங்கினார்.
அப்போது கடைக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பிய கவுசல்யாவின் தாயார் சகுந்தலா வீட்டு கதவு பூட்டி கிடப்பதை கண்டு ஜன்னல் வழியாக எட்டி பார்த்தார்.
அங்கு மகள் தூக்கில் தொங்கியதை கண்டு திடுக்கிட்டு சத்தம் போட்டார். உடனே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து கதவை உடைத்து கவுசல்யாவை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பிறகு கோபி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்க கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து நம்பியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தற்கொலை செய்வதற்கு முன் கவுசல்யா எழுதி வைத்திருந்த ஒரு கடிதத்தையும் போலீசார் கைப்பற்றினர். அதில் ‘‘என்னால் எழுந்து கூட நிற்க முடியவில்லை. என்னை மன்னித்து விடுங்கள்’’ என்று எழுதி உள்ளார்.