மத போதகரை துன்புறுத்தி வாட்ஸ்அப்பில் வீடியோ வெளியிட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் 3 பேர் கைது
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் கோக்குடி அருகே உள்ள காணிக்கைபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஆரோன்குமார். மதபோதகரான இவர் அரியலூர் மீனாட்சி நகரை சேர்ந்த மார்க்ஸ்ட், திருச்சியை சேர்ந்த அந்தோணி ஆகியோருடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு அரியலூர் சாலையில் நடந்து சென்றவர்களிடம் கிறிஸ்தவ மதம் குறித்த துண்டு பிரசுரங்களை விநியோகித்தார்.
அப்போது அங்கு வந்த கடுகூர் பொய்யூர் கிராமத்தைச் சேர்ந்த பா.ஜ.க. ஒன்றிய தலைவர் முத்துவேல் (வயது 25), காமராஜர்நகரை சேர்ந்த பா.ஜ.க. மாவட்ட அலுவலக செயலாளர் வைரவேல் (39), ஓ.கூத்தூர் பகுதியை சேர்ந்த பா.ஜ.க. மாவட்ட பொறுப்பாளர் பொன்சேகர் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஆரோன்குமார் உள்ளிட்ட 3 பேரையும் தாக்கி உள்ளனர்.
மேலும் அவர்களை மாரியம்மன் கோவிலுக்கு அழைத்து சென்று, அவர்களின் நெற்றியில் குங்குமம் மற்றும் விபூதியை பூசி கீழே விழுந்து வணங்கும்படி துன்புறுத்தியதோடு, அதனை வீடியோவாக எடுத்து வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.
இதுகுறித்து ஆரோன்குமார் அரியலூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துவேல், வைரவேல், பொன்சேகர் ஆகிய 3 பேரையும் கைது செய்து அரியலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
நீதிபதி அவர்களை காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து 3 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.