செய்திகள்

தமிழக ஆராய்ச்சியாளரை காதலித்து மணந்த அமெரிக்க பெண் - தமிழ் முறைப்படி திருமணம்

Published On 2019-01-28 05:34 GMT   |   Update On 2019-01-28 05:34 GMT
திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலில் அமெரிக்க பெண்ணை தமிழக ஆராய்ச்சியாளர் தமிழ் முறைப்படி திருமணம் செய்து கொண்டார். #Marriage
வெள்ளக்கோவில்:

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் டி.ஆர். நகரை சேர்ந்தவர் செல்லமுத்து. இவரது மகன் பிரித்வி செல்லமுத்து. இவர் பிளஸ்-2 வரை ஈரோடு பள்ளியூத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்தார். பின்னர் வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் படித்தார். இதனை தொடர்ந்து அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல் நகரில் ஒரு பல்கலைக்கழகத்தில் பயோ டெக்னாலஜி படிக்க சென்றார்.

அங்கு படிப்பு முடிந்ததும் அதே பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளராக வேலை பார்த்து வந்தார். இந்த பல்கலைக்கழகத்தில் அமெரிக்காவை சேர்ந்த ஏஞ்செலா கிளைபர் என்ற பெண் டாக்டருக்கு படித்து வந்தார். இவருக்கும் பிரித்வி செல்லமுத்துவுக்கும் காதல் ஏற்பட்டது. ஏஞ்செலா கிளைபர் டாக்டருக்கு படித்து முடித்தார். பின்னர் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். தங்களது காதலை பெற்றோரிடம் தெரிவித்தனர். இரு வீட்டு பெற்றோரும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர்.

அதன் படி பிரித்வி செல்லமுத்து - ஏஞ்செலா கிளைபர் திருமணம் வெள்ளக்கோவில் முத்தூர் சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

தமிழ் முறைப்படி இந்த திருமணம் நடைபெற்றது. மணமகள் பட்டு சேலை அணிந்து இருந்தார். அவரது கழுத்தில் பிரித்வி செல்லமுத்து தாலி கட்டினார்.

இந்த திருமணத்தில் மணமகனின் உறவினர்கள், நண்பர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

பின்னர் அங்கு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதிலும் நண்பர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். திருமணம் முடிந்ததும் மணமக்கள் இன்று அமெரிக்கா புறப்பட்டு சென்றனர். #Marriage



Tags:    

Similar News