செய்திகள்

கஸ்தூரியின் கருத்துக்கு சமூக வலைதளங்களில் கண்டனம்

Published On 2019-01-23 10:47 GMT   |   Update On 2019-01-23 10:47 GMT
ஒண்ணாம் கிளாஸ் ஆசிரியருக்கு பொறியாளரை விட அதிக சம்பளம் என சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்த நடிகை கஸ்தூரிக்கு ஏராளமானோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். #Kasthuri
சென்னை:

நடிகை கஸ்தூரி சமூக வலைதளங்களில் சர்ச்சையான கருத்துகளை தெரிவித்து பரபரப்பு ஏற்படுத்துவார். ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் போராட்டத்தை அவர் விமர்சித்தது டுவிட்டரில் பரபரப்பாகி உள்ளது.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்வது, 21 மாத நிலுவைத்தொகையை வழங்குவது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ அமைப்பு தொடர்ந்து போராடி வருகிறது.

தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நேற்று தொடங்கியது. இதில் 8 லட்சம் பேர் பங்கேற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டம் காரணமாக அரசு அலுவலகங்கள், அரசுப்பள்ளிகளில் பணிகள் முடங்கியுள்ளன.

இதுகுறித்து பதிவிட்ட நடிகை கஸ்தூரி, ’தனியார் பள்ளி கல்லூரி ஆசிரியர்களை விட மும்மடங்கு சம்பளம், வேலை பளுவோ குறைவு. மாணவர்கள் வெற்றி குறித்த அழுத்தம், பொறுப்பும் கவலையும் அதினும் குறைவு. செய்தாலும் செய்யாவிட்டாலும் வேலை நிரந்தரம். வேறு எங்கும் இல்லாத ஓய்வூதியம், அரசு விருதுகள், பயணத்தள்ளுபடி, இலவச உணவு உள்ளிட்ட சலுகைகள், அரசு செலவில் கல்வி ஆய்வு அல்லது ஆராய்ச்சி செய்ய வெளியூர், வெளிநாடு பயணம், தேர்தல் பணிக்கு பணம், இப்படி அரசு கல்வித்துறையில் பணிசெய்வோருக்கு ஏராளமான வாய்ப்புக்கள் உள்ளன.

ஒண்ணாம் கிளாஸ் வாத்தியாருக்கு டைடல் பார்க்கில் வேலை செய்யும் பொறியாளரை விட சம்பளம் அதிகம். சத்துணவுக்கும் சம்பளத்துக்கும் மிக அதிகமாக செலவு செய்வது தமிழகம்தான். வாங்கின காசுக்கு உண்மையா கற்றுக்கொடுத்தா அரசு பள்ளி தரம் எப்பிடி இருக்கணும்?’’ என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

கஸ்தூரியின் இந்த பதிவுக்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. அரசியல்வாதிகளையும் கார்ப்பரேட் கொள்ளையர்களையும் கேள்வி கேட்க முடியாதவர் என்று கஸ்தூரியை விமர்சித்து வருகிறார்கள். கஸ்தூரியின் கருத்துக்கு சிலர் ஆதரவு தெரிவித்தும் பதிவிட்டு வருகின்றனர். #Kasthuri
Tags:    

Similar News