செய்திகள்

2-வது மனைவி தீக்குளித்து மரணம்: தற்கொலைக்கு தூண்டியதாக பால் வியாபாரி கைது

Published On 2019-01-20 14:47 GMT   |   Update On 2019-01-20 14:47 GMT
கொள்ளிடம் அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறில் 2-வது மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு தூண்டியதாக அவரை போலீசார் கைது செய்தனர்.
சீர்காழி:

நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள ஆலாலசுந்தரம் கிராமம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சொக்கலிங்கம் (வயது 55). பால் வியாபாரி.

இவரது முதல் மனைவி ஏற்கனவே இறந்து விட்டார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

இந்த நிலையில் சொக்கலிங்கம் அதே பகுதியை சேர்ந்த ஜெயந்தி (37) என்ற பெண்ணை 2-வது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அருண் (14) என்ற மகன் உள்ளான். இதற்கிடையே ஜெயந்திக்கும், சொக்கலிங்கத்துக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. குழந்தைகளை வளர்ப்பது குறித்து கணவன்-மனைவி இடையே தொடர்ந்து தகராறு ஏற்பட்டு வந்தது. இதேபோல் நேற்று முன்தினம் இரவும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சொக்கலிங்கம், ஜெயந்தியை திட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த ஜெயந்தி அருகே உள்ள ஒரு பாழடைந்த வீட்டுக்குள் சென்று தனது உடலில், மண்எண்ணை ஊற்றி தீக்குளித்து கொண்டார். இதில் உடல் கருகி சம்பவ இடத்திலேயே கரிக்கட்டையாகி இறந்தார். இந்த சம்பவம் பற்றி ஜெயந்தியின் தாய் செந்தாமரை, கொள்ளிடம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் முனிசேகர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

இதையடுத்து 2-வது மனைவி ஜெயந்தியை தற்கொலைக்கு தூண்டியதாக பால் வியாபாரி சொக்கலிங்கத்தை கொள்ளிடம் போலீசார் நேற்று இரவு கைது செய்தனர்.
Tags:    

Similar News