செய்திகள்

ரூ.142 கோடி மதிப்பில் அரசு பள்ளிக்கூடங்களுக்கு புதிய கட்டிடங்கள்-ஆய்வகங்கள்: முதலமைச்சர் திறந்து வைத்தார்

Published On 2018-12-12 09:51 GMT   |   Update On 2018-12-12 09:51 GMT
ரூ.142 கோடியே 94 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார். #TNCM #Edappadipalaniswami
சென்னை:

நபார்டு நிதியுதவி திட்டத்தின் கீழ், ஈரோடு மாவட்டம், செங்கோடம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 1 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆய்வகத்துடன் கூடிய 4 வகுப்பறைக் கட்டடம், கலை மற்றும் ஓவிய அறை, கணினி அறை மற்றும் நூலக அறை ஆகியவற்றை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

கடலூர், கோயம்புத்தூர், தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, கரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருப்பூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள 33 அரசு உயர் நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 54 கோடியே 61 லட்சத்து 2 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 160 வகுப்பறைக் கட்டடங்கள், 33 ஆய்வகக் கட்டடங்கள், குடிநீர் வசதி, கழிவறைகள் மற்றும் சுற்றுச்சுவர்;

கோயம்புத்தூர், கடலூர், திண்டுக்கல், தருமபுரி, கரூர், மதுரை, நாகப்பட்டினம், இராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், திருப்பூர், திருவாரூர், திருவள்ளூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள 57 அரசு உயர்நிலைப் பள்ளிகளில் 86 கோடியே 63 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 57 பள்ளிக் கட்டடங்கள் என மொத்தம் 142 கோடியே 94 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக பள்ளிக் கல்வி இயக்ககத்தின் அமைச்சுப் பணிக்கு 62 உதவியாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

மேற்கண்ட 62 உதவியாளர் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று 7 பேருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் பா. வளர்மதி, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் கலந்து கொண்டனர்.

வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை சார்பில் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 50 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட குளிர்பதன கிடங்கினை காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.

மேலும், 3 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் திருவாடானையில் கட்டப்பட்டுள்ள கிடங்குடன் கூடிய அலுவலகக் கட்டடம், மதுரை மற்றும் விருதுநகரில் கட்டப்பட்டுள்ள 2 வேளாண்மைப் பொறியியல் விரிவாக்க மையக் கட்டடங்களையும் திறந்து வைத்தார்.  #TNCM #Edappadipalaniswami
Tags:    

Similar News