செய்திகள்
திருவண்ணாமலையில் நேற்று இரவு எரிந்த மகா தீபம்.

திருவண்ணாமலை மகா தீபம் அணைந்ததாக வதந்தி- வாட்ஸ் அப்பில் பரப்புபவர்கள் மீது நடவடிக்கை

Published On 2018-11-30 10:56 GMT   |   Update On 2018-11-30 10:56 GMT
திருவண்ணாமலை மகா தீபம் அணைந்துவிட்டதாகக் கடந்த 2 நாட்களாக வாட்ஸ் அப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது. #TiruvannamalaiArunachaleshwartemple
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 14-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு விமரிசையாக நடைபெற்றது.

தினமும் காலை, இரவு வேளைகளில் சாமி வீதி உலாக்களுடன் தீபத் திருவிழா களை கட்டியது. விழாவின் 10-ம் நாளான கடந்த 23-ம்தேதி அதிகாலை பரணி தீபமும், அன்று மாலை 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட்டது.

லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தீப தரிசனம் செய்தனர். மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகா தீபம், தொடர்ந்து 11 நாள்கள் எரியும். தீபத்தின் ஒளி சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவுக்குத் தெரியும்.

இந்த நிலையில், மகா தீபம் அணைந்துவிட்டதாகக் கடந்த 2 நாட்களாக வாட்ஸ் அப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது.

இதையடுத்து, வேலூர் மாவட்டம் உட்படத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வசிப்பவர்கள் தங்களது வீட்டு வாசலில் விளக்கேற்றி வழிபட்டு வருகின்றனர்.

இதுபற்றி திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி. சிபி சக்கரவர்த்தியிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

மகா தீபம் அணையவில்லை. தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கிறது. நாங்கள் தொடர்ந்து கவனித்து வருகிறோம்.

இதுபோன்ற தவறான தகவல்களைச் சமூக வலை தளங்களில் பரப்புவோர் யாராக இருந்தாலும், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். #TiruvannamalaiArunachaleshwartemple
Tags:    

Similar News