செய்திகள்

சேலம் கோர்ட்டில் மு.க.ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு

Published On 2018-11-03 07:54 GMT   |   Update On 2018-11-03 07:54 GMT
தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் மீது சேலம் கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. #MKStalin #DMK
சேலம்:

சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே கடந்த செப்டம்பர் மாதம் 18-ந் தேதி தி.மு.க. சார்பில் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .

இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தமிழக அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியதாக சேலம் கோர்ட்டில் தமிழக அரசு சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மு.க. ஸ்டாலின் மீது 499, 500 (தமிழக அரசு மீது ஆதாரம் இல்லாமல் களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியது) ஆகிய 2 பிரிவுகளின் கீழ் அரசு வக்கீல் தனசேகரன் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு இன்னும் ஒரு வாரத்தில் விசாரணைக்கு வர இருக்கிறது.

இதுகுறித்து அரசு வக்கீல் தனசேகரன் கூறியதாவது:-

சேலத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மு.க. ஸ்டாலின் தமிழக முதல்-அமைச்சரை பேடி என்றும், அமைச்சர்கள் ஊழல் செய்திருப்பதாகவும் தனித்தனியாக ஆதாரம் இல்லாமல் குற்றம் சாட்டி உள்ளார். இது தமிழக அரசுக்கும், அமைச்சர்களுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இதனால் மு.க. ஸ்டாலின் மீது அரசு அனுமதி பெற்று இந்த வழக்கை தொடர்ந்துள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

சேலம் கோர்ட்டில் மு.க. ஸ்டாலின் மீது வழக்கு தொடர்ந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #MKStalin #DMK
Tags:    

Similar News