செய்திகள்

பிறப்பு-இறப்பு பதிவு செய்வதில் குளறுபடி: சுகாதாரத்துறை செயலாளருக்கு மதுரை ஐகோர்ட்டு நோட்டீஸ்

Published On 2018-11-01 07:42 GMT   |   Update On 2018-11-01 07:42 GMT
பிறப்பு, இறப்பு பதிவு செய்வதில் குளறுபடி தொடர்பாக சுகாதாரத்துறை செயலாளருக்கு மதுரை ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. #MaduraiHighcourt
மதுரை:

நெல்லை சங்கரன் கோவிலைச் சேர்ந்த டைட்டஸ் ஆதிநாதன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்.

அதில், “தமிழகத்தில் 142 முனிசிபாலிட்டிகளும், 300-க்கும் அதிகமான நகர பஞ்சாயத்துகளும் உள்ளன. இவை நகராட்சி சட்டப்படி நிர்வகிக்கப்பட்டு வருகின்றன.

அவற்றில் முக்கியமான பணி பொதுமக்களின் ஆரோக்கியத்தை கண்காணிப்பதும், அதனைத் துல்லியமாக கணக்கிடும் வகையில் பிறப்பு, இறப்புகளை பதிவு செய்வதும் ஆகும்.

இதனை முறைப்படுத்தும் நோக்கில் பிறப்பு இறப்பு பதிவுச்சட்டம் கொண்டு வரப்பட்டது. இதனை நகராட்சி மற்றும் நகரப்பஞ்சாயத்து ஆகிய உள்ளூர் அமைப்புகள் பராமரித்து முறையாக பதிவுகளை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் பிறப்பு இறப்பு பதிவுகளை மேற்கொள்வது தொடர்பாக 2017-ல் அரசாணை எண் 353-ம், 2018 செப்டம்பரில் அரசாணை எண் 443-ம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஒரு குறிப்பிட்ட பகுதியை 2 ஆக பிரித்து, ஒரு பகுதியில் நகராட்சி சார்பில் சுகாதார ஆய்வாளரும், சுகாதாரத்துறை சார்பில் சுகாதார ஆய்வாளர்களும் பிறப்பு, இறப்பு பதிவுகளை மேற்கொள்வர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு எல்லைக்குள் இரு பகுதிகளாக பதிவு நடைபெறுவது தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும், மேலும் தகவல்களை தவறாக பதிவு செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

இதனால் துல்லியமான புள்ளி விவரங்களை பெறுவது என்பதும், சுகாதாரத்தை அளவிடுவது என்பதும் இயலாததாகி விடும்.

எனவே பிறப்பு இறப்பு பதிவு தொடர்பான 2 அரசாணைகளையும் ரத்து செய்யவும், அதுவரை அவற்றை செயல்படுத்த இடைக்கால தடை விதிக்க வேண்டும்.

மேற்கண்டவாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுந்தரேஷ், சதீஷ்குமார், இது குறித்து சுகாதார மற்றும் குடும்ப நலத்துறையின் முதன்மை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். மேலும் வழக்கை வருகிற 14-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர். #MaduraiHighcourt
Tags:    

Similar News