செய்திகள்
கொலை செய்யப்பட்ட பிரபு கைதான அவரது மனைவி லட்சுமி.

அரக்கோணம் அருகே போதையில் தகராறு செய்த கணவனை துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொன்ற மனைவி

Published On 2018-10-22 10:19 GMT   |   Update On 2018-10-22 10:37 GMT
அரக்கோணம் அருகே போதையில் தகராறு செய்த கணவனை துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி மனைவி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

அரக்கோணம்:

அரக்கோணம் அடுத்த மோசூரை சேர்ந்தவர் பிரபு (வயது 30). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி லட்சுமி (27). தம்பதிக்கு ஜோதி (8) என்ற மகள், சூர்யா (7) என்ற மகன் உள்ளனர்.

பிரபுவுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. அடிக்கடி குடித்துவிட்டு வந்து லட்சுமியிடம் தகராறு செய்து வந்தார். நேற்று இரவு போதையில் வீட்டுக்கு வந்த அவர் தகராறு செய்து அவரது மனைவியை அடித்து உதைத்தார். அக்கம் பக்கத்தினர் வந்து அவரை சமாதானம் செய்து வைத்தனர்.

நள்ளிரவு வரை தொடர்ந்து தகராறில் ஈடுபட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த லட்சுமி துப்பட்டாவால் பிரபுவின் கழுத்தை இறுக்கினார். மூச்சு திணறல் ஏற்பட்டு பிரபு துடிதுடித்து இறந்தார்.

பின்னர் வீட்டுக்குள் இருந்தபடி லட்சுமி கதறி அழுதார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் சென்றனர். அங்கு பிரபு பிணமாக கிடந்ததை கண்டு திடுக்கிட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த அரக்கோணம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். பிரபுவின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து லட்சுமியை கைது செய்தனர். கணவர் குடிபோதையில் அடித்து உதைத்ததால் ஆத்திரத்தில் துப்பட்டாவை எடுத்து கழுத்தை இறுக்கிவிட்டதாக லட்சுமி போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

இதனால் அவர்களது மகன், மகள் தவித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News