அதிக நேரம் தூங்கியதை கண்டித்ததால் பிளஸ்-2 மாணவி தற்கொலை- விரக்தியில் தாயும் உயிரை மாய்த்த பரிதாபம்
மதுரை:
மதுரை கே.புதூர் லூர்து நகர் 8-வது தெருவைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி தங்கம் (வயது 36). இவர்களது மகள் ரோகிணி (17). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
நேற்று விடுமுறை தினம் என்பதால் ரோகிணி காலையில் அதிக நேரம் தூங்கிக் கொண்டிருந்தார். இதனை அவரது தாயார் தங்கம் கண்டித்ததாக தெரிகிறது.
இதனால் விரக்தியுடன் காணப்பட்ட ரோகிணி மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனியறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதை பார்த்த தங்கம் அதிர்ச்சி அடைந்தார். தான் கண்டித்ததால் மகள் தற்கொலை செய்து கொண்டாள் என்ற எண்ணத்தில் அவரும் உயிரை மாய்த்துக் கொள்ள முடிவு செய்தார்.
அதன்படி வீட்டில் இருந்த ஆசிட்டில் கண்ணாடி துகள்களை போட்டு குடித்தார். உயிருக்கு போராடிய அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி தங்கம் பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து கே.புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மகள் தற்கொலை செய்து கொண்டதால் தாயும் உயிரை மாய்த்துக் கொண்டது அந்தப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.