இலங்கை ராணுவத்தை கண்டித்து விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்
கன்னியாகுமரி:
ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை ராணுவம் சிறைபிடித்து அவர்களது உடமைகளை பறிமுதல் செய்வதை கண்டித்தும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும் இன்று மாநிலம் முழுவதும் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்கு தளமாக கொண்டு 350-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் மூலம் மீனவர்கள் ஆழ்கடலுக்கு சென்று மீன் பிடித்து வருகிறார்கள்.
இந்த மீனவர்களும் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் போராட்டத்தில் குதித்து உள்ளனர். இதனால் விசைப்படகுகள் சின்ன முட்டம் துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சி பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மீனவர்கள் வேலை நிறுத்தம் காரணமாக வெளியூர் வியாபாரிகள் இங்கு வராததால் துறைமுகம் மற்றும் மீன் சந்தை வெறிச் சோடி காணப்பட்டது. வருகிற 8-ந்தேதிக்கு முன்பு இதில் நடவடிக்கை எடுக்கப் படாவிட்டால் மாவட்ட தலைநகரங்களில் கலெக்டர் அலுவலகங்கள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவும் மீனவர்கள் முடிவு செய்துள்ளனர். #Fishermenstrike #Fishermen