செய்திகள்
மவின்குமாரை கிணற்றுக்குள் தள்ளிவிட்ட காட்சி.

மதுபோதையில் விளையாடிய போது விபரீதம்- நண்பர்களால் கிணற்றில் தள்ளப்பட்ட வாலிபர் பலி

Published On 2018-10-01 14:47 IST   |   Update On 2018-10-01 14:47:00 IST
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே மதுபோதையில் நண்பர்களால் கிணற்றில் தள்ளி விடப்பட்ட வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
வாணியம்பாடி:

வாணியம்பாடி அடுத்த சப்பந்தி குப்பத்தை சேர்ந்தவர் மகேந்திரன் மகன் மவின்குமார் (வயது 24). பெங்களூரில் தச்சு வேலை செய்து வந்தார். நேற்று ஊருக்கு வந்தார். இதையடுத்து அவரது நண்பர்கள் 6 பேருடன் சேர்ந்து அங்குள்ள தென்னந்தோப்பில் மது குடித்தனர்.

போதையில் நண்பர்கள் ஒருவருக்கொருவர் தள்ளி விட்டு விளையாடினர். மவின்குமாருக்கு அதிகளவிலான போதை தலைக்கேறியது. இதனால் அவரை அங்குள்ள கிணற்றில் தூக்கி போடுவதற்காக தூக்கினர். இதனை அவரது செல்போனில் வீடியோ எடுத்தனர். பின்னர் மவின்குமாரை தூக்கி கிணற்றில் போட்டனர்.

மேலும் அவர்களும் கிணற்றுக்குள் குதித்து குளித்தனர். மவின்குமார் தண்ணீரில் தத்தளித்தார். நீச்சல் தெரியாத அவர் கிணற்றுக்குள் மூழ்கினார். இதனால் பதறிப்போன அவரது நண்பர்கள் அங்கிருந்து சென்று விட்டனர்.

இன்று காலை மவின்குமாரின் உறவினர்கள் அவரை தேடி சென்றனர். அப்போது கிணற்றின் அருகே அவரது செல்போன் கிடந்தது. அதில் நண்பர்கள் சேர்ந்து அவரை கிணற்றில் தூக்கி வீசிய வீடியோ காட்சிகளை கண்டு திடுக்கிட்டனர். கதறி அழுத அவர்கள் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.


தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி மவின்குமாரை பிணமாக மீட்டனர். வாணியம்பாடி தாலுகா போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் மவின்குமாரின் நண்பர்கள் சுதர்சன், அருண், அஜித், பாவித் ஆகியோரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News