செய்திகள்
கூட்டத்தில் டி.டி.வி.தினகரன் பேசிய போது எடுத்தபடம். அருகில் வீரா சிதம்பரம் உள்ளார்.

தமிழகத்தில் அடிமை ஆட்சி நடக்கிறது - டிடிவி தினகரன் பேச்சு

Published On 2018-10-01 08:14 GMT   |   Update On 2018-10-01 08:14 GMT
அம்மா பெயரை சொல்லி, ஆட்சி நடத்துபவர்கள் மத்தியில் ஆள்பவர்களுக்கு சுக போகர்களாக, கை கட்டி, வாய் பொத்தி அடிமையாக சேவை செய்து வருகின்றனர் என்று டிடிவி தினகரன் கூறினார். #TTVDhinakaran
ஈரோடு:

ஈரோடு பெருமாள் மலை அருகே இந்திய திராவிட மக்கள் முன்னேற்ற கட்சியின், அருந்ததியர் சமுதாய அரசியல் எழுச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கட்சியின் நிறுவனர் வீரா சிதம்பரம் தலைமை வகித்து பேசினார்.

இதில் சிறப்பு அழைப்பாளராக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டு பேசியதாவது:-

நான் இங்கு வருவதற்கு முதன்மை காரணம் தமிழகத்தில் ஜாதி, மத, பேத மற்ற சமுதாய நல்லிணக்கத்தில் மக்கள் வாழ வேண்டும். யாருக்கும் வேண்டுமானலும் நீங்கள் வாக்கு அளியுங்கள். அது உங்கள் தனிப்பட்ட உரிமை. ஆனால் நம்மிடம் பிரிவினை உண்டாக்க நினைத்தால், அதுக்கு இடம் கொடுக்காமல் நம்மிடையே ஜாதி மத பேதமின்றி அனைவரும் சகோதர சகோதரிகளாக இருப்போம் என தான் இங்கு வந்திருக்கிறேன். தமிழகத்தில் ஜாதி மற்றும் மதத்தின் பெயரை சொல்லி துண்டாட தீய சக்திகள் தேர்தலை நோக்கி குறிவைத்து வருகின்றனர்.

அதற்கு இடம் கொடுக்க கூடாது என்று உங்களிடம் வேண்டுகோளாக வைக்கிறேன். திராவிட இயக்கத்தின் அடி நாதமே சமூக நீதி தான். மத்தியில் ஆள்பவர்களால் சமூக நீதி சிதைக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக ஏழை எளிய மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவு மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. 12ம் வகுப்பில் எவ்வளவு மார்க் எடுத்தாலும், நீட் தேர்வில் வெற்றி பெற்றால் தான் மருத்துவ படிப்பில் சேர முடியும் என்ற நிலை உள்ளது. இதன் காரணமாக கடந்த ஆண்டு அனிதாவை இழந்தோம். இந்த ஆண்டு பிரதீபாவை இழந்தோம். பேரறிஞர் அண்ணா, மாநிலத்தில் சுய ஆட்சி, மத்தியில் கூட்டாட்சி என்ற தத்துவத்தில் அடிப்படையில் தான் திராவிட இயக்கத்தை உருவாக்கினார்.

இன்று அம்மா பெயரை சொல்லி, ஆட்சி நடத்துபவர்கள் மத்தியில் ஆள்பவர்களுக்கு சுக போகர்களாக, கை கட்டி, வாய் பொத்தி அடிமையாக சேவை செய்து வருகின்றனர். மேலும் மத்தியில் ஆள்பவர்களுக்கு ஏவல் அரசாங்கமாக, அடிமை அரசாங்கமாக தமிழகத்தில் திகழ்ந்து கொண்டிருக்கின்றனர். அதனால் தான் தமிழக மக்கள் இந்த ஆட்சி தொடர கூடாது என்பதை நினைத்து, தேர்தலை எதிர்பார்த்தும்,ஆட்சி மாற்றத்தை எதிர்ப்பார்த்தும் காத்து கொண்டிருக்கின்றனர்.

ஆட்சி பொறுப்பில் இருக்கும் பழனிச்சாமியும், அமைச்சர்களும் இன்று யாரால் பொறுப்பில் இருக்கிறோம் என மறந்து விட்டு, ஏற்றி விட்ட ஏணியை எட்டி உதைத்து, உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்கின்றனர். தங்களை பதவியில் அமர வைத்தவர்களுக்கு துரோகம் செய்தவர்கள் எப்படி நல்வர்களாக இருக்க முடியும்? சீர்திருத்தங்கள் செய்ய முடியும்? நலத்திட்டங்களை வழங்க முடியும்? தயவு செய்து எண்ணிப்பாருங்கள். இந்த ஆட்சியில் இருப்பவர்கள் ஆட்சியில் இருக்க கூடாது என்று அமமுக தமிழக மக்கள் சார்பில் போராடி வருகிறது.

பாஜக தேசிய செயலாராக இருக்கும் எச்.ராஜா, பெரியாரை பற்றியும், காவல்துறை, நீதித்துறை பற்றி அவதூரக பேசினார். அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் திண்ணையில் படுத்து தூங்கி கொண்டிருக்கின்றனர்.

தமிழகத்தின் நலன் கருதி இந்த ஆட்சியினை முடிவுக்கு கொண்டு வரவேண்டும். ஊழல் குற்றச்சாட்டுகள், முறைகேடுகள் எத்தனையோ வெளி வருகின்றன. இந்த ஆட்சி முடிவுக்கு வந்தால் தான் தமிழகத்திற்கு விடிவு பிறக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.  #TTVDhinakaran




Tags:    

Similar News