செய்திகள்

கள்ளக்காதலனுடன் சேர்ந்து என்ஜினீயரை கொன்ற மனைவி - கர்நாடக இளம்பெண் வெறிச்செயல்

Published On 2018-09-25 06:22 GMT   |   Update On 2018-09-25 06:22 GMT
கொடைக்கானல் செல்லும் மலைப்பாதையில் இறந்து கிடந்த வாலிபர் கள்ளக்காதல் பிரச்சினையில் கொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது.
தேவதானப்பட்டி:

தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே கொடைக்கானல் செல்லும் டம்டம் பாறை மலைப்பகுதியில் கடந்த 18-ந் தேதி அடையாளம் தெரியாத வாலிபர் பிணம் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கிடந்தது.

தேவதானப்பட்டி போலீசார் அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். பின்னர் தேனி அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு தேவதானப்பட்டி சுடுகாட்டில் புதைத்தனர்.

இதனிடையே கர்நாடக மாநிலம் மங்களூரு போலீசார் தேவதானப்பட்டி போலீஸ் நிலையத்துக்கு வந்தனர். அவர்கள் டம்டம் பாறை அருகே கொலை செய்யப்பட்டு கிடந்தவரின் புகைப்படத்தை வைத்து விசாரணை நடத்தியதில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த என்ஜினீயர் முகமதுசமீர் (வயது32) என தெரிய வந்தது.

இவர் அரபு நாட்டில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார். கடந்த 2 வருடங்களுக்கு முன்பு பிரதோஷ் என்பருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 6 மாத பெண் குழந்தை உள்ளது.

கடந்த மாதம் கர்நாடக மாநிலம் மங்களூருக்கு தனது மனைவியை பார்க்க முகமதுசமீர் வந்துள்ளார். அதன்பிறகு கொடைக்கானல் சுற்றுலா வந்தபோது கொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது.

முகமதுசமீர் வெளிநாட்டில் வேலை பார்ப்பதால் 6 மாதத்திற்கு ஒருமுறை தனது மனைவியை பார்க்க வருவது வழக்கம். ஆனால் மாதம்தோறும் அவர்களது செலவுக்கு பணம் அனுப்பி வந்துள்ளார்.

இதனிடையே பிரதோஷ் என்பவருக்கும் மங்களூருரை சேர்ந்த கார் டிரைவர் முகமதுயாசிக் என்பவருக்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

பிரதோஷ், முகமது யாசிக்குடன் சேர்ந்து வாழ விரும்பினார். இதற்கு கணவர் இடையூறாக இருக்கலாம் என நினைத்ததால் அவரை தீர்த்து கட்ட முடிவு செய்தார். இதனை தனது கள்ளக்காதலன் முகமது யாசிக்கிடம் தெரிவித்தார். அதன்படி அவர்கள் கொடைக்கானல் செல்ல முடிவு செய்தனர்.

தனது கள்ளக்காதலனையே கார் டிரைவராக பிரதோஷ் ஏற்பாடு செய்தார். இதனை அறியாத முகமதுசமீர் மனைவி மற்றும் குழந்தையுடன் கொடைக்கானல் வந்தார். டம்டம் பாறை அருகே வந்தபோது மனைவி பிரதோஷ் மற்றும் முகமதுயாசிக் ஆகிய 2 பேரும் என்ஜினீயர் முகமதுசமீரை கழுத்தை அறுத்து கொலை செய்தனர்.

பட்டறைப்பாறை என்ற இடத்தில் அவரது உடலை தூக்கி வீசினர். அதன்பிறகு கடந்த 17-ந் தேதி பிரதோஷ் மட்டும் தனது குழந்தையுடன் வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டில் இருந்தவர்கள் சமீர் எங்கே என்று கேட்டபோது அவர் தனது நண்பருடன் சேலத்திற்கு சென்று விட்டதாக கூறி உள்ளார்.

மேலும் வீட்டில் இருந்த 60 பவுன் நகையை எடுத்துக் கொண்டு பிரதோஷ் தலைமறைவானார்.

இதனால் வீட்டில் இருந்தவர்களுக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. கொலை செய்யப்பட்டு முகமதுசமீர் இறந்ததாக செய்தி வெளியானபோது அது குறித்து எவ்வித பதட்டமும் இல்லாமல் பிரதோஷ் இருந்ததால் அவரே கொலை செய்தது உறுதியாகி உள்ளது.

பெங்களூரில் இருந்து முகமதுசமீரின் உறவினர்கள் தேவதானப்பட்டி வந்தனர். அவர்கள் தங்களது மத வழக்கப்படி முகமதுசமீர் உடலை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும். எனவே உடலை தரும்படி கேட்டனர்.

இதனையடுத்து முகமது சமீர் உடல் புதைக்கப்பட்ட இடத்தில் தோண்டி எடுக்கப்பட்டு பெரியகுளம் தாசில்தார் முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டது.

உறவினர்கள் கொடுத்த தகவலின் பேரில் தேவதானப்பட்டி போலீசார் சமீரின் மனைவியையும் கார் டிரைவரையும் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்களது செல்போன்கள் கடந்த 18-ந் தேதி முதல் சுவிட்ஆப் செய்யப்பட்டுள்ளது. தர்மபுரியில் பதுங்கி இருப்பதாக போலீசார் சந்தேகித்துள்ளனர். இதனால் இன்ஸ்பெக்டர் சுகுமாறன் தலைமையில் தனிப்படை போலீசார் அங்கு விரைந்துள்ளனர்.

கொடைக்கானலில் கடந்த மாதம் சென்னை திருவான்மியூரை சேர்ந்த நடிகை விஷ்ணுபிரியாவின் கள்ளக்காதலன் கூலிப்படையால் கொலை செய்யப்பட்டார். இதனையடுத்து மதுரையை சேர்ந்த வாலிபர் கள்ளக்காதல் பிரச்சினையில் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டார்.

தற்போது அதேபோல 3-வது ஒரு சம்பவம் நடந்துள்ளது. இதனால் கொடைக்கானல் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Tags:    

Similar News