செய்திகள்

கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படை குவிப்பு - தமிழக மீனவர்கள் பாதியிலேயே கரை திரும்பினர்

Published On 2018-09-18 04:32 GMT   |   Update On 2018-09-18 04:32 GMT
கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படை குவிக்கப்பட்டதால் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்காமல் பாதியிலேயே கரை திரும்பினர். #Fishermen #SriLankaNavy

ராமேசுவரம்:

தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க செல்லும்போது கச்சத்தீவு அருகே எல்லை தாண்டி வந்ததாக இலங்கை கடற்படை அவர்களை சிறைபிடிப்பதும், தாக்கி விரட்டியடிப்பதும் தொடர் கதையாக நடந்து வருகிறது.

தமிழக மீனவர்கள் மீன் பிடிப்பதை தடுக்க இலங்கை அரசு கடும் சட்டங்களை இயற்றி உள்ளது. இலங்கை கடற்படையின் அச்சுறுத்தல் காரணமாக மீனவர்கள் உயிர் பயத்துடனேயே தொழில் செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று ராமேசுவரம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

அவர்கள் இந்திய கடல் எல்லையை ஒட்டியுள்ள கச்சத்தீவு அருகே மீன்பிடிக்க சென்றபோது இலங்கை கடற்படையினர் அதிக அளவில் ரோந்து பணியில் இருந்தனர். இதனால் மீனவர்கள் தொடர்ந்து செல்ல முடியாமல் பல மணி நேரம் ஒரே இடத்திலேயே நின்று கொண்டிருந்தனர்.

ஆனாலும் இலங்கை கடற்படையினர் தொடர்ந்து அந்த பகுதியில் முகாமிட்டு இருந்தனர். இதனால் சிறை பிடிக்கப்படுவோமோ என்று அஞ்சிய ராமேசுவரம் மீனவர்கள் மீன் பிடிப்பதை கைவிட்டு விட்டு ஏமாற்றத்துடன் பாதியிலேயே கரை திரும்பினர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், தற்போது டீசல் விலை உயர்ந்த நிலையிலும் கடன் வாங்கி கொண்டு மீன்பிடிக்க செல்கிறோம். ஒவ்வொரு முறை கடலுக்கு செல்லும்போது டீசலுக்கு ரூ.50 ஆயிரத்துக்கு மேல் செலவாகிறது.

ஆனாலும் மீன் பிடிக்கவிடாமல் இலங்கை கடற் படையினர் அச்சுறுத்தி வருகின்றனர். தமிழக மீனவர்களின் வாழ்வா தாரத்தை சீர்குலைக்கவே இதுபோன்ற செயல்களில் இலங்கை கடற்படை ஈடுபடுகிறது.

இந்த முறை கடலுக்கு செல்லும்போது சர்வதேச கடல் எல்லையில் இலங்கை கடற்படை குவிக்கப்பட்டு இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்றனர்.

Tags:    

Similar News